லீக்கான "வீடியோ".. ஆசையில் காலேஜ் மாணவி செய்த "சம்பவம்".. இதுக்கு போய் தற்கொலையா? கொடுமை!
கொல்கத்தா: ஒரே ஒரு சாக்லேட்டை திருடியதற்காக கல்லூரி மாணவியை தாக்கி பணம் வாங்கியதுடன், அந்த வீடியோவை கடைக்காரர்கள் இணையத்தில் பதிவிட்டதால் அவமானத்தில் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
திருடியது தவறுதான் என்றாலும், அந்தப் பொருளுக்கான பணத்தையும் வாங்கிக் கொண்டு, வீடியோவை வெளியிட்ட கடைக்காரர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும், அந்த மாணவியின் பெற்றோருக்கு நஷ்ட ஈடு வழங்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்மார்ட்போன் விபரீதம்..
அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட்போன்கள் வந்ததில் நன்மை, தீமை இரண்டுமே இருக்கின்றன. சமூகத்தில் நடக்கும் குற்றங்கள், போலீஸாரின் அத்துமீறல்கள் போன்ற நடவடிக்கைகளை உடனுக்குடன் வீடியோ எடுத்து அதை இணையத்தில் பதிவிடுவது நல்ல விஷயம். இதனால் அவர்கள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க முடிகிறது. மேலும், சமூக விரோதிகளும், அதிகாரவர்க்கத்தில் இருப்பவர்களும் ஒரு தவறான செயலை செய்வதற்கு பயப்படும் சூழலும் உருவாகியுள்ளது. இது, உண்மையிலேயே நல்ல விஷயம்தான். அதே சமயத்தில், ஒரு ஏழை தனது பசியை போக்க, யாருக்கும் தெரியாமல் ஒரு வடையை எடுப்பதை பெரிய திருட்டாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவிடுவது நியாயம் ஆகாது. இதுபோன்ற அற்பமான காரியங்களிலும் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல மேற்கு வங்கத்தில் நடந்த ஒரு சம்பவம் கல்லூரி மாணவியின் உயிரையை காவு வாங்கியிருக்கிறது.

கூலித்தொழிலாளி குடும்பம்
மேற்கு வங்க மாநிலம் அலிபுர்தார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரத்தன் கோஷ். கூலித் தொழிலாளியான இவருக்கு இரண்டு மகள்கள் இருந்தனர். மூத்த பெண், அங்குள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இரண்டாவது மகள் பதினோறாம் வகுப்பு படித்து வருகிறார். வறுமையின் பிடியில் சிக்கியுள்ள குடும்பம்தான் என்றாலும், ரத்தன் கோஷ் கஷ்டப்பட்டு தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்து வந்தார்.

சாக்லேட்டுக்கு ஆசைப்பட்டு..
இந்நிலையில், நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், ரத்தன் கோஷின் மகள்கள் இருவரும் காய்கறி வாங்க அங்குள்ள மார்க்கெட்டுக்கு சென்றனர். காய்கறிகளை வாங்கிய அவர்கள், அங்கிருந்த ஷாப்பிங் மாலை சுற்றிப் பார்ப்பதற்காக அங்கு சென்றனர். அப்போது அங்கு ஒரு கடையில் விதவிதமான சாக்லேட்டுகள் இருந்திருக்கின்றன. இதுவரை அதுபோன்ற சாக்லேட்டுகளை அவர்கள் சாப்பிட்டது கிடையாது. இதனால் அங்கிருந்த 20 ரூபாய் சாக்லேட்டை யாருக்கும் தெரியாமல் கல்லூரி மாணவி எடுத்திருக்கிறார்.

அவமானம் - தற்கொலை
இதை பார்த்துவிட்ட கடைக்காரர்கள், அந்த மாணவியை பிடித்து அடித்துள்ளனர். மேலும், அவர் எடுத்த சாக்லேட்டுக்கான பணத்தையும் அவர்கள் வாங்கியுள்ளனர். இதையடுத்து, அந்த மாணவியை அவர்கள் வீடியோ எடுத்தனர். அதற்கு அந்த மாணவி, சாக்லேட்டுக்கான பணத்தை வாங்கிவிட்டீர்கள் அல்லவா.. இந்த வீடியோவை வெளியிடாதீர்கள் எனக் கெஞ்சி இருக்கிறார். ஆனால் கடைக்காரர்கள் அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். அந்த வீடியோவும் வைரல் ஆனது. இதை அறிந்து மிகவும் அவமானம் அடைந்த அந்த மாணவி, நேற்று காலை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில், அந்தக் கடைக்காரர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications