திரிணாமுல் காங். அரசுக்கு மிக பெரிய சிக்கல்! மேற்கு வங்க சட்டசபையை முடக்கிய ஆளுநர் ஜெகதீப் தங்கர்!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில், ஆளுநர் ஜெகதீப் தங்கர் பிறப்பித்துள்ள உத்தரவு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் அம்மாநில ஆளுநர் ஜெகதீப் தங்கருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு போக்கே நிலவி வருகிறது.
இந்நிலையில், மோதலில் அடுத்தகட்டமாக மேற்கு வங்க சட்டசபை பிப்ரவரி 12 முதல் காலவரையின்றி முடக்கி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மோதல் போக்கு
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தாவுக்கும் ஆளுநருக்கும் ஏழாம் பொருத்தம் தான். அம்மாநிலச் சட்டசபைத் தேர்தல் முடிந்த சமயத்தில், மேற்கு வங்கத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை. மம்தா பானர்ஜி சட்ட ஒழுங்கை காப்பாற்ற வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். அதற்குத் தேர்தல் காலத்தில் மாநில நிர்வாகம் தன்னுடைய கட்டுப்பாட்டிலேயே இல்லை எனக் கூறி பதிலடி கொடுத்திருந்தார் மம்தா. மேற்கு வங்க அரசு அனுப்பும் கோப்புகளில் ஆளுநர் ஜெகதீப் தங்கர் கையெழுத்திடுவதில்லை என அம்மாநில அமைச்சர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

தீர்மானம்
மோதல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஒரு கட்டத்தில் பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநரை நீக்குவது தொடர்பாகக் கூட ஆலோசித்து வருவதாகக் கூறி அம்மாநில அமைச்சர்கள் அதிர்ச்சி கொடுத்தனர். இதற்கிடையே நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில் திரிணாமூல் காங்கிரஸ் அரசு, ஆளுநர் ஜகதீப் தங்கருக்கு எதிராகத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வர உள்ளதாகத் தகவல் வெளியானது.

முடக்கம்
இது ஆளுநருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், புதிய திருப்பமாக, மேற்கு வங்க சட்டசபை பிப்ரவரி 12 முதல் காலவரையின்றி முடக்கி ஆளுநர் உத்தரவிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆளுநர் ஜெகதீப் தங்கர் தனது ட்விட்டரில், "அரசியலமைப்புச் சட்டத்தின் 174 வது பிரிவின் பிரிவு (a)ன் உட்பிரிவு (2) மூலம் எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, நான் மேற்கு வங்காள சட்டமன்றத்தைப் பிப்ரவரி 12, 2022 முதல் முடக்குகிறேன்" என ட்வீட் செய்துள்ளார்.

சிக்கல்
இந்த உத்தரவு தொடர்பான நகலையும் அவர் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் ஆளுநரின் அனுமதியின்றி மேற்கு வங்க சட்டசபையைக் கூட்ட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. சட்டசபை மீண்டும் கூட வேண்டுமானால் ஆளுநரின் அனுமதியோடு, அவரது உரையோடு மட்டுமே கூட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்க பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் நடைபெற இருந்த நிலையில், சட்டசபை முடக்கப்பட்டுள்ளது. உரியக் காலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை என்றால் அது அரசின் செயல்பாடுகளையே பாதிக்கும் சூழல் ஏற்படலாம்,

பரிந்துரை இல்லாமல் முடக்கம்
பொதுவாக, சட்டசபை சபாநாயகர் பரிந்துரை அளித்தால் மட்டுமே இதுபோல சட்டசபைகள் முடக்கப்படும். ஆனால், எவ்வித பரிந்துரையும் இல்லாமல் ஆளுநர் சட்டசபையை முடக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை திரிணாமுல் தலைவர்கள் அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை என்று சாடி வருகின்றனர். அதேநேரம் ஆளுநர் தனது அதிகாரத்திற்கு உட்பட்டே செயல்படுவதாகவும் மாநில அரசின் தொடர்ச்சியான அவமதிப்பு நடவடிக்கை காரணமாகவே இது நடந்துள்ளது என்றும் அம்மாநில பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications