தனி கோசல் மாநிலம் கோரி மேற்கு ஒடிஷாவில் 12 மணி நேர பந்த்!
சம்பல்பூர்: மேற்கு ஒடிஷாவில் 11 மாவட்டங்களை உள்ளடக்கி தனி கோசல் மாநிலம் அமைக்க வலியுறுத்தி நூற்றுக்கணக்கான அமைப்புகள் சார்பில் 12 மணி நேர முழு அடைப்புப் போராட்டம் இன்று நடத்தப்பட்டது.
ஒடிஷாவின் மேற்கு பகுதியில் சம்பல்பூர், ஜர்ஷ்குடா, பலாங்கிர், நுவபடா, சுந்தர்கார், பவுத், பர்கார், கலஹாண்டி, சோனேபுர் மற்றும் அங்குல் மாவட்டத்தின் அத்மல்லிக் பிரதேசம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து தனி கோசல் மாநிலம் அமைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை.
இந்த கோரிக்கைக்காக நூற்றுக்கணக்கான அமைப்புகள் ஒருங்கிணைந்து கோசல் மாநில ஒருங்கிணைப்புக் குழு என்ற கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த கூட்டமைப்பின் சார்பில் தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி 12 மணி நேர முழு அடைப்புப் போராட்டம் இன்று நடைபெற்றது.
இன்றைய முழு அடைப்பின் போது பல இடங்களில் தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கோசல் கிராந்தி தள் என்ற இயக்கத்தின் பல இடங்களில் ரயில்களை மறித்து போராட்டம் நடத்தினர்.
இந்த முழு அடைப்புப் போராட்டத்தால் மேற்கு ஒடிஷாவில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டது.