நாட்டின் எந்த 15 நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்க முயன்றது? இந்தியா அதை முறியடித்தது எப்படி!
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியப் பாதுகாப்புப் படைகள், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியது. இதற்கிடையே இந்தியாவின் வெற்றியைக் கண்டு பொறுக்காத பாகிஸ்தான் நள்ளிரவில் 15 நகரங்கள் மீது தாக்குதல் நடத்த முயன்றுள்ளது. இருப்பினும், அதை இந்தியா முறியடித்துவிட்டது. இதற்கிடையே பாகிஸ்தான் எந்த நகரங்களில் தாக்குதல் நடத்த முயன்றது என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்.
கடந்த மாதம் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் மிக மோசமான தாக்குதலை நடத்தினர். இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியப் பாதுகாப்புப் படைகளை நேற்று ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. இதில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி
இந்தத் தாக்குதலில் பல்வேறு தீவிரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன. பாகிஸ்தான் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வெற்றிகரமாக முடிந்தது. ஆனால், இந்த வெற்றியைப் பொறுத்துக் கொள்ள முடியாத பாகிஸ்தான், இந்தியா மீது தாக்குதல் நடத்த முயன்றுள்ளது. இருப்பினும், இந்தியப் பாதுகாப்பு அமைப்பு அந்தத் தாக்குதலை முறியடித்துள்ளது. இதன் காரணமாகவே சில இடங்களில் உடைந்த டிரோன் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அதாவது பாகிஸ்தான் நேற்றிரவு 15 இந்திய நகரங்களின் மீது தாக்குதல் நடத்த முயன்றுள்ளது. இருப்பினும், அந்தத் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்த பதிலடியாக லாகூரில் உள்ள வான் பாதுகாப்பு அமைப்பைச் செயலிழக்கச் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தாக்குதல் முறியடிப்பு
இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அந்தச் செய்திக்குறிப்பில், "மே 07-08 இரவு, வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் உள்ள நகரங்களில் உள்ள ராணுவ மையங்களைக் குறிவைத்து டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி பாகிஸ்தான் தாக்க முற்பட்டது. இருப்பினும், நமது வான் பாதுகாப்பு அமைப்பு ( Counter UAS Grid and Air Defence systems) மூலம் அவை அழிக்கப்பட்டன. பாகிஸ்தானின் இந்தத் தாக்குதல் முயற்சியை முறியடிக்கும் வகையிலேயே டிரோன் மற்றும் ஏவுகணையின் உடைந்த பாகங்கள் பல இடங்களில் இருந்து மீட்கப்பட்டு வருகின்றன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த நகரங்கள்?
பாகிஸ்தான் நேற்றிரவு எந்த நகரங்களில் தாக்குதல் நடத்த முற்பட்டது என்பது குறித்த தகவல்களையும் இந்திய ராணுவம் பகிர்ந்துள்ளது. அவந்திபுரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அமிர்தசரஸ், கபுர்தலா (Kapurthala), ஜலந்தர், லூதியானா, ஆதம்பூர், பட்டிண்டா (Bhatinda), சண்டிகர், நல், பலோடி, உத்தராலி மற்றும் பூஜ் உள்ளிட்ட நகரங்களில் உள்ள ராணுவ மையங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தாக்க முயன்றுள்ளது. இருப்பினும், இந்தியப் பாதுகாப்பு அமைப்பு அந்த டிரோன்களை காலி செய்துவிட்டது.
இந்தியா- பாகிஸ்தான்
ஆபரேஷன் சிந்தூரில் இந்தியா தீவிரவாத முகாம்களையே குறிவைத்து இருந்தது. பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது எந்தவொரு தாக்குதலையும் நடத்தவில்லை. இதை நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூட இந்தியா ராணுவம் மிகத் தெளிவாகக் கூறியது. மேலும், எந்த இடங்களில் தாக்குதல் நடத்தினார்கள் என்பது குறித்த துல்லியமான மேப்பையும் கூட பகிர்ந்தனர். ஆனால், நேற்றைய தினம் பாகிஸ்தான் இந்திய ராணுவ நிலைகளையே குறிவைத்துத் தாக்குதல் நடத்த முயன்றுள்ளது. ஆனால், அதையும் இந்தியப் பாதுகாப்புப் படை வெற்றிகரமாக முறியடித்துவிட்டது.












Click it and Unblock the Notifications