Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மு.க. ஸ்டாலின் சொல்லும் 'திராவிட மாடல்' ஆட்சி - இது உண்மையில் எப்படியிருக்கும்?

Subscribe to Oneindia Tamil

Click here to see the BBC interactive

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் திமுக கூட்டணிக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியை தங்களது ஒன்பது மாத கால 'திராவிட மாடல்' ஆட்சிக்குத் தமிழ்நாட்டு மக்கள் அளித்துள்ள நற்சான்றிதழ் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 'திராவிட மாடல்' என முதல்வர் குறிப்பிடுவது ஏன்?

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியிருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசினார் மு.க. ஸ்டாலின்.

அப்போது அவர், "கடந்த 9 மாத கால ஆட்சிக்கு மக்கள் வழங்கியிருக்கும் நற்சான்றுதான் இந்த மாபெரும் வெற்றி. தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கக்கூடிய திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் அளித்திருக்கக் கூடிய அங்கீகாரம் இது," என்று குறிப்பிட்டார்.

மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வெற்றியைப் பற்றி குறிப்பிட்ட முதலமைச்சர், "ஒன்பது மாத கால 'திராவிட மாடல்' ஆட்சிக்குத் தமிழ்நாட்டு மக்கள் அளித்துள்ள நற்சான்றிதழ் இந்த முடிவு" என்றும் குறிப்பிட்டார்.

2021இல் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, 'திராவிட மாடல்' என்ற வார்த்தையை முதலமைச்சர் பயன்படுத்துவது இது முதல் முறையல்ல.

https://twitter.com/mkstalin/status/1496084610870308864

கடந்த ஆண்டு ஜூலை 9ஆம் தேதி பொருளாதார ஆலோசனைக் கவுன்சிலின் கூட்டம் நடைபெற்றது.

https://twitter.com/annadurai_tn/status/1400136986258673670

ரகுராம் ராஜன், எஸ்தர் தஃப்லோ, அரவிந்த் சுப்பிரமணியன், டாக்டர் எஸ். நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், எஸ்.நாராயணன் எழுதிய "Dravidian Years" நூலை மேற்கோள்காட்டிப் பேசினார்.

"Dravidian Years" புத்தகத்தில் எஸ். நாராயணன் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார்.

"அரசியல், வளர்ச்சி, நிர்வாகம் ஆகியவற்றின் இடையில் நெருக்கமான, உயிர்ப்புள்ள ஒரு உறவை உருவாக்குவதில் கருணாநிதி யுகம் வெற்றி கண்டது. பிற்காலத்தில் அது போன்ற பல திட்டங்களை உருவாக்குவதற்கு அது அடிப்படையாக அமைந்தது."

இதுதான் திராவிட மாடல். எல்லா சமூகங்களுக்குமான வளர்ச்சி. எல்லா மாவட்டங்களையும் சமூகத்தின் எல்லா பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி. இது தான் திராவிட மாடல். எல்லோரையும் உள்ளடக்கிய இந்த பாணியில் தமிழ்நாடு வளர வேண்டுமென நினைக்கிறேன், என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

"மேலும், தொழில்துறை வளர்ச்சி, சமூக மாற்றம், கல்வியில் சாதனை போன்ற எல்லாமும் ஒரே சமயத்தில் நடக்க வேண்டும். வளர்ச்சி என்பது வெறும் பொருளாதார வளர்ச்சியாக மட்டும் இருக்க முடியாது. சமூக முன்னேற்றமும் இருக்க வேண்டும். பொருளாதாரம், கல்வி, சமூகம், சிந்தனை, செயல் ஆகிய ஐந்தும் முன்னேற்றமடைய வேண்டும். அம்மாதிரியான ஒரு வளர்ச்சியைத்தான் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் காண விரும்பினர். அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி" என்றும் குறிப்பிட்டுள்ளார் மு.க. ஸ்டாலின்.

இது குறித்து திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டீன் கூறுகையில், "நம்முடைய முதலமைச்சர் மறைமுகமாக சொல்ல வருவது என்னவென்றால் இது பெரியாரின் பூமி என்பதைத்தான். பெரியார் எதையெல்லாம் இந்த சமூகத்தில் மாற்ற வேண்டுமென நினைத்தாரோ அதன் அடிப்படையில் அமைந்த அரசுதான் இந்த அரசு என்று சுட்டிக்காட்டியிருக்கிறார் முதல்வர். ஆகவே தற்போது கிடைத்த வெற்றியை இந்த அரசின் திட்டங்களுக்கு, பெரியாரின் கொள்கைகளுக்குக் கிடைத்த அங்கீகாரமாக பார்க்கிறார். பிறப்பொக்கும் எல்லா ரும் சமம். எல்லோரும் சமவாய்ப்பு. அதைத்தான் திராவிட மாடல் பாணி அரசு என முதல்வர் குறிப்பிடுகிறார்" என்கிறார்.

https://twitter.com/mkstalin/status/1486253426908737537

"ஆனால், இதற்கு முன்பு மு. கருணாநிதி போன்றவர்கள் இதுபோன்ற முத்திரை வார்த்தையை பயன்படுத்தாத நிலையில், தற்போதைய முதல்வர் இதைப் பயன்படுத்துவது ஏன்? "காரணம் இருக்கிறது. கடந்த நான்கு ஆண்டு காலமும் எடப்பாடி பழனிசாமி என்ற முகமூடியை வைத்துக்கொண்டு, பா.ஜ.க. ஆட்சி செய்தது.

தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டன. நம் வளங்கள் சுரண்ட வாய்ப்பளிக்கப்பட்டது. எல்லாவற்றிலும் ஒருமையைத் திணிக்க முயன்றார்கள். அதற்கு எதிரான மாடலாகத்தான் நம்முடைய மாடலை முன்வைக்க வேண்டியிருக்கிறது. அதற்காகத்தான் முதல்வர் இப்படிக் குறிப்பிடுகிறார்," என்கிறார் கான்ஸ்டன்டீன்.

மூத்த பத்திரிகையாளரான ப்ரியன், முதல்வரின் திராவிட மாடல் கருத்தாக்கம் மீதான தமது பார்வையை விளக்கினார்.

"சமூக நீதி, சம நீதி, சுயமரியாதை, கூட்டாட்சி, மொழி பாதுகாப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய திராவிடம் சார்ந்த கொள்கையை திமுக நீண்ட காலமாகவே முன்வைத்து வருகிறது; அதன் தொடர்ச்சிதான் தற்போது முதல்வர் கூறும் திராவிட மாடல்," என்கிறார் அவர்.

https://youtu.be/IFOtJfi9nMQ

"நாடாளுமன்றத்தில் அண்ணா பேசும்போது "I belong to Dravidian Stock" என்று குறிப்பிட்டார். அதன் தொடர்ச்சிதான் இது. சமூக நீதி, சம உரிமை என்ற திசையில் தி.மு.க. தொடர்ந்து செயல்பட்டு வந்திருக்கிறது. கருணாநிதி ஆட்சியின்போது, பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட்டது. அதேபோல, மொழி பாதுகாப்பு, கூட்டாட்சி போன்றவற்றில் கவனம் செலுத்தினார். மத்திய அரசு - மாநில அரசு இடையிலான உறவுகள் குறித்து பரிந்துரைகளை அளிக்க ராஜமன்னார் குழுவை அமைத்தார். இப்போது மு.க. ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதைச் செயல்படுத்தினார். பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கும் பயன்பட்டது. இதையே மு.க. ஸ்டாலின் தொடர்ந்து திராவிட மாடல் என குறிப்பிடுகிறார்" என்கிறார் ப்ரியன்.

தவிர, முன்பில்லாத வகையில் தொடர்ந்து திராவிட மாடல் என்ற தத்துவத்தை முன்வைக்க வேண்டிய தேவையும் இப்போது இருக்கிறது என்கிறார் ப்ரியன்.

"ஆர்.எஸ்.எஸ். சமயம் கிடைக்கும்போதெல்லாம் இடஒதுக்கீட்டை நீக்க வேண்டும் என கூறி வருகிறது. இந்தச் சூழலில்தான் இந்தத் தத்துவத்தை திமுக முன்வைக்க வேண்டியிருக்கிறது. காரணம், ஒரு தத்துவத்தை இன்னொரு தத்துவத்தின் மூலம்தான் எதிர்க்க வேண்டும். பாரதிய ஜனதா கட்சியை இன்னொரு அரசியல் கட்சியாக எதிர்கொண்டால் தோல்விதான் கிடைக்கும்.

ஆகவேதான் திராவிட மாடல், திராவிடன் ஸ்டாக் என்பதை திரும்பத் திரும்ப சொல்ல வேண்டியிருக்கிறது. பா.ஜ.க. தனது தத்துவமாக இந்துத்துவத்தை முன்வைக்கும்போது, அதற்கு எதிரான தத்துவமாக திராவிடத்தைத்தான் முன்வைக்க முடியும். தற்போது திராவிடத்தை முன்வைப்பதற்கான அ.தி.மு.க. இழந்துவிட்டது. ஆகவே, அதனை முன்வைப்பதற்கான ஒரே கட்சியாக தி.மு.கதான் இருக்கிறது. இதனால்தான் திரும்பத் திரும்ப மு.க. ஸ்டாலின் திராவிட மாடல் என்பதை முன்வைக்கிறார். அது சரியான உத்திதான்" என்கிறார் ப்ரியன்.

திடீர் பிரபலமான சொல்லாடல்

திராவிட சித்தாந்தத்தின் அடிப்படையிலான அரசு அல்லது கட்சி என்பது ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட வார்த்தைதான் என்றாலும், 'திராவிட மாடல்' என்பது சமீபத்தில்தான் குறிப்பாக 2021ஆம் ஆண்டுக்குப் பிறகே அதிகம் பிரபலமானது.

சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தின் பேராசிரியர்களான ஏ. கலையரசனும் எம். விஜயபாஸ்கரும் எழுதி The Dravidian Model என்ற புத்தகம் வெளியானது. அந்த புத்தகம் வெளியான பிறகு, 1967க்குப் பிறகு தமிழ்நாட்டில் நிகழ்ந்த வளர்ச்சி பாணியைக் குறிப்பிட 'திராவிட மாடல்' என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன.

அந்தப் புத்தகத்தின் பின்னணியைப் பற்றிக் குறிப்பிடும்போது, திராவிட மாடல் என்றால் என்ன என்பது, அந்தப் புத்தகத்திலேயே விளக்கப்பட்டிருக்கிறது.

"பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்த மாநிலங்கள், மனதவள குறியீடுகளில் பின்தங்கியிருக்கின்றன. மனிதவள குறியீடுகளில் மேம்பட்ட மாநிலங்கள் பொருளாதார வளர்ச்சியில் அந்த அளவுக்கு மேம்படவில்லை. ஆனால், தமிழ்நாடு இந்தப் போக்கை முறியடித்திருக்கிறது. இங்கு மிகச் சிறந்த பொருளாதார வளர்ச்சியும் மனதவள மேம்பாடும் இருக்கிறது. சாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுக்கு மாறாக மக்களை ஒன்று திரட்டி, தமிழ்நாடு அடைந்திருக்கும் சமூக, பொருளாதார வளர்ச்சியை இந்தப் புத்தகம் விளக்குகிறது" என திராவிட மாடல் பற்றி அதில் விவரிக்கப்பட்டுள்ளது.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை
BBC
பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை
BBC
பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+