மழைக்கு இடையே அட்டாக்.. 3 பக்கத்திலிருந்து தாக்குதல்! காஷ்மீரில் 5 வீரர்கள் வீரமரணம்! எப்படி நடந்தது
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 5 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாடா துரியன் நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. 6 ராணுவ வீரர்கள் பயணம் செய்து கொண்டு ராணுவ வாகனத்தில் திடீரென தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.

துப்பாக்கி சூடு நடத்தியதோடு ராணுவ வாகனம் மீது கிரெனேட் குண்டு வீசியும் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் அந்த வாகனம் அங்கேயே தீ பிடித்து உள்ளது.
இந்த தாக்குதலில் 5 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ஒரு ராணுவ வீரர் மோசமாக காயம் அடைந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
எப்படி நடந்தது?
அங்கே ராணுவ வீரர்கள் தேடுதல் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த போது இந்த சம்பவம் நடந்து உள்ளது.
பூன்ச் மாவட்டத்தின் ரஜோரி செக்டார் பகுதியில் இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பீம்பர் கலி மற்றும் பூஞ்ச் இடையே ராணுவம் வாகனம் சென்று கொண்டு இருந்த போது அங்கே மழை காரணமாக சாலையில் போதிய வெளிச்சம் இல்லாமல் இருந்துள்ளது.
இதை பயன்படுத்தி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். கையெறி குண்டுகளை வீசியதால் ராணுவ வீரர்களால் தப்பிக்க முடியவில்லை.
ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பிரிவை சேர்ந்த ராணுவ வீரர்கள்தான் இந்த ததுப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டனர்.
இந்த துப்பாக்கிச் சூடு மூன்று பக்கங்களிலிருந்தும் நடத்தப்பட்டு இருக்கிறது. அதைத் தொடர்ந்து கையெறி தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. இதனால் வீரர்களால் சுதாரிக்க முடியவில்லை.
எரிபொருள் டேங்கில் தீப்பிடித்ததற்கான ஆதாரங்கள் உள்ளதால் அங்கே கையெறி குண்டு விழுந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் ஈடுபட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

ஜெய்ஷ் ஆதரவு பெற்ற தீவிரவாதக் குழுவான மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி (PAFF - People's Anti-Fascist Front) எனப்படும் அமைப்பு இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தாக்குதலுக்குப் பிறகு கோபத்துடன் ட்வீட் செய்து உள்ளார். சமூக வலைத்தளத்தில் தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ள அவர், "பூன்ச் மாவட்டத்தில், ராணுவ ஜீப் தீப்பிடித்ததில் இந்திய ராணுவம் தனது தைரியமான வீரர்களை இழந்து உள்ளது. இந்த இழப்பால் நான் வேதனையடைந்தேன். இந்த சோகமான நேரத்தில், அந்த வீரர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிக்கிறேன்., என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாக்குதல் தொடர்பாக ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே உடன் ராஜ்நாத் சிங் தீவிர ஆலோசனை நடத்தினர். அங்கே தற்போது ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டு தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அங்கே இதையடுத்து பாதுகாப்பு உயர்த்தப்பட்டு உள்ளது. அங்கே தீ பிடித்த ராணுவ வாகனத்தில் தற்போது ஆதாரங்களை தேடும் பணிகள் நடந்து வருகின்றன. என்ன மாதிரியான குண்டுகள் பயன்படுத்தப்பட்டது என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications