சட்டென வந்திறங்கிய பிரசாந்த் கிஷோர்.. மொத்தமாக மாறும் ஆந்திர அரசியல்.. இதை யாருமே எதிர்பார்க்கல
விஜயவாடா: பிரபல தேர்தல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் ஆந்திர எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்துள்ளார். இது ஏன் முக்கியம். இதன் பின்னணி என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.
நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் லோக்சபா தேர்தலுடன் சட்டசபைத் தேர்தலும் நடைபெறுகிறது. அங்கே இப்போது ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது.

மறுபுறம் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் எதிர்க்கட்சியாக இருக்கிறது. இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், அடுத்தாண்டு நடக்கும் தேர்தல் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
ஆந்திரா அரசியல்: இதற்கிடையே ஆந்திர அரசியலில் திடீர் மாற்றம் அரங்கேறி இருக்கிறது. அங்கே சட்டசபைத் தேர்தல் நடைபெற நான்கு மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் அங்கே சென்றுள்ளார். அதிலும் அவர் யாரைச் சந்தித்தார் என்பது தான் இங்கே முக்கியம். அவர் இப்போது ஆந்திராவில் எதிர்க்கட்சியாக இருக்கும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்தார்.
இது ஏன் முக்கியம் என்றால் கடந்த 2019இல் ஆந்திராவில் நடந்த சட்டசபைத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அப்போது அவர்களுக்கு பிரசாந்த் கிஷோர் தொடங்கிய ஐபேக் நிறுவனம் தான் தேர்தல் ஆலோசகராக இருந்தது. மீண்டும் 2024 தேர்தலுக்கும் ஐபேக் நிறுவனத்துடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஒப்பந்தம் போட்டுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், இது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
பிகே: இந்த சந்திப்பிற்காக பிரசாந்த் கிஷோர், தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளரும் சந்திரபாபு நாயுடுவின் மகனுமான நாரா லோகேஷ் உள்ளிட்ட 4 பேருடன் தனி விமானத்தில் ஹைதராபாத்தில் இருந்து விஜயவாடாவுக்குச் சென்றுள்ளார். அந்த 3 பேரில் ஒருவர் பிரசாந்த் கிஷோருடன் ஐபேக்கில் பணி புரிந்தவர். இப்போது அந்த நபர் ஷோடைம் கன்சல்டிங் என்ற ஆலோசனை அமைப்பில் உள்ளார். இந்த நிறுவனம் தான் இப்போது தெலுங்கு தேசம் கட்சிக்குத் தேர்தல் ஆலோசகராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபேக்: பிரசாந்த் கிஷோரின் இந்த வீடியோ இணையத்தில் பரபரப்பைக் கிளப்பியது. இதனால் அடுத்த ஆந்திர தேர்தல் குறித்த பல குழப்பங்கள் ஏற்பட்டது. ஐபேக் நிறுவனம் சந்திரபாபு நாயுடு உடன் இணைகிறதா என்ற பேச்சுகளும் எழுந்தன.
இதற்கிடையே ஐபேக் நிறுவனம் இது தங்கள் எக்ஸ் பக்கத்தில், "2024 இல் மீண்டும் ஒரு அமோக வெற்றியைப் பெறும் வரை நாங்கள் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உடன் இணைந்து பயணிப்போம். ஆந்திரப் பிரதேச மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த அவரது அசைக்க முடியாத முயற்சிகள் தொடரும் வரை, நாங்கள் ஒன்றாக இணைந்து பயணிப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.
ஏன் முக்கியம்: ஜெகன் மோகன் ரெட்டி கடந்த 2019 ஆந்திர தேர்தலுக்கு முன்பு மிகப் பெரிய ஒரு பாத யாத்திரையை நடத்தி இருந்தார். 2019இல் ஆந்திர தேர்தலில் அவர் வெல்ல இந்த பாத யாத்திரை முக்கிய காரணமாக இருந்தது. இந்தச் சூழலில் நாரா லோகேஷும் 3132 கிமீ தூரத்திற்கு ஆந்திராவில் 226 நாட்கள் மிகப் பெரிய பாத யாத்திரையை நடத்தினார். இந்த யாத்திரை டிச.18இல் தான் முடிந்தது. இந்தச் சூழலில் அங்கே படுவேகமாக அரசியல் மாற்றங்கள் அரங்கேறி வருகிறது.
2014 தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பிரச்சாரத்தில் பிரசாந்த் கிஷோர் முக்கிய பங்கு வகித்தார். 2021இல் அவர் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் திமுகவுக்குத் தேர்தல் ஆலோசகராக இருந்த நிலையில், அதன் பிறகு ஐபேக் நிறுவனத்தில் இருந்து விலகினார். இடையில் சில காலம் நிதிஷ் குமாரின் ஜனதா தளத்தில் இருந்தாலும் கருத்து வேறுபாடு காரணமாக அங்கிருந்தும் விலகினார்.
தொடர்ந்து 2022இல் அவர் ஜன் சூராஜ் என்ற அமைப்பை ஆரம்பித்து பாத யாத்திரை நடத்தி வருகிறார். ஜான் சுராஜ் ஒரு அரசியல் கட்சியாக மாற வாய்ப்பு இருக்கிறது என்றாலும் அதேநேரம் தான் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று அவர் உறுதியாகக் கூறி வருகிறார்.












Click it and Unblock the Notifications