மிரட்டும் காமன்வெல்த் ஊழல்.. சசி தரூர் பாணியில் மோடிக்கு பலமாக ஜால்ரா அடிக்கும் 'ஷீலா தீட்சித்'
டெல்லி: காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான சசி தரூர் பாணியில் பிரதமர் மோடிக்கு பலமாக ஜால்ரா அடிக்கிறார் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்து எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெற முடியாமல் போனது. மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமைந்த உடன் காங்கிரஸ் ஆட்சிக் காலத்து ஆளுநர்களை மாற்ற முடிவு செய்யப்பட்டது.
அப்போது இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தவர் கேரளா ஆளுநராக இருந்த டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித். உச்சநீதிமன்றத்துக்கு போவேன் என்றெல்லாம் சவடால் விட்டார்.
அதன் பின்னர் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து பேசிய கையோடு ராஜினாமா செய்தார். அதன் பின்னர் மத்திய அரசு எதிர்ப்புக் குரலை அடக்கி வாசிக்கத் தொடங்கினார். இதற்கு காரணம் இல்லாமல் இல்லை.
டெல்லி முதல்வராக ஷீலா தீட்சித் இருந்த போது காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்றதில் நடைபெற்றதில் ஊழல் செய்ததாக வழக்குகள் இருக்கின்றன. இந்த வழக்குகளில் எப்போது வேண்டுமானாலும் ஷீலா தீட்சித் கைது செய்யப்படலாம் என்ற நிலை உள்ளது.
தற்போது ஹரியானாவில் பாஜக ஆட்சியை அமைத்த உடனேயே சோனியா மருமகன் ராபர்ட் வதேரா மீதான நிலக் கொள்ளையை தூசு தட்டத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள ஷீலா தீட்சித், கேரளா ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதற்கு மோடியை நான் சந்தித்தேன். நான் பார்த்தது இலக்கைக் கொண்ட மிகவும் தன்னம்பிக்கையான ஒரு மனிதரை என்று ஐஸ் மழையை கொட்டி வைத்திருக்கிறார்.
ஏற்கெனவே மனைவி மர்ம மரண வழக்கில் சிக்கியிருக்கிறார் காங்கிரஸின் மூத்த தலைவர் சசிதரூர். அதனால்தான் அவர் மோடியை புகழ்ந்து ஜால்ரா அடித்து வருகிறார். இதனாலேயே அவர் வகித்து வந்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பதவி பறிபோனது.
இப்போது சசி தரூர் பாணியிலேயே ஷீலாவும் ஜால்ரா அடிக்கத் தொடங்கியிருக்கிறார்...
பார்க்கலாம் வழக்கு பாயுதா? பதுங்குதாவென?