நல்ல காலமா வந்துருக்கு.. கஷ்ட காலம்... மோடியை வாரும் மமதா!
கொல்கத்தா: மோடி வந்தால் நல்ல காலும் வரும் என்று சொன்னார்கள். ஆனால் உண்மையில் வந்திருப்பது கஷ்ட காலம்தான் என்று மேற்கு வங்க முதல்வரும் திரினமூல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி கிண்டலடித்துள்ளார்.
இதுகுறித்து கொல்கத்தாவில் நடந்த கட்சியின் மாநாட்டில் அவர் பேசுகையில், நரேந்திர மோடி அரசுக்கு எதிராக மக்கள் இயக்கம் தொடங்க வேண்டும். மத்தியில் உள்ள அரசு விலைவாசியை உயர்த்தி வருகிறது. பாஜகவால் மேற்கு வங்கத்தில் பெரிய கட்சியாக ஒருபோதும் உருவெடுக்க முடியாது. வர முடியாது.

ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திலேயே மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தத் தொடங்கி விட்டது. ரயில் கட்டணத்தை உயர்த்தி விட்டது, சரக்குக் கட்டணத்தை உயர்த்தி விட்டது.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பலவற்றைப் பேசியது பாஜக. ஆனால் இப்போது அப்படியே பின் வாங்கி விட்டது.
மேற்கு வங்கத்தில் ஒரே ஒரு சீட்டில்தான் பாஜகவால் வெல்ல முடிந்தது. அவர்களுக்கு அதற்கு மேல் கிடைக்காது. இதற்கு மேல் கிடைக்கும் என எதிர்பார்க்காதீர்கள். அடுத்த பொதுத் தேர்தலில் இது கூட கிடைக்காது. முட்டைதான் கிடைக்கும்.
மதவாத அரசியலில் ஈடுபட பாஜக முனைகிறது. அதை நான் அனுமதிக்க மாட்டேன். மேற்கு வங்கத்தில் மதவாதத்திற்கு இடமே இல்லை என்றார் அவர்.












Click it and Unblock the Notifications