மோடி, அமித்ஷாவுக்கு இதேதான் வேலை.. சொல்வதை நம்பிடாதீங்க.. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அட்டாக்
ஜெய்பூர்: கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தின் போது பஜ்ரங்கபலி என்ற கோஷத்தை பாஜகவினர் முன்வைத்தனர் ஆனால் இது எடுபடவில்லை என்று ராஜஸ்தான் தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முதல்வருமான அசோக் கெலாட் பேசினார்.
200 - சட்டமன்ற தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக அக்கட்சியின் மூத்த தலைவர் அசோக் கெலாட் பதவி வகித்து வருகிறார். ராஜஸ்தானில் கடந்த 1993 -ம் ஆண்டுக்கு பிறகு இதுவரை ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சி அமைத்தது கிடையாது. எனவே வரும் தேர்தலிலும் ஆளும் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்பதில் பாஜக வியூகம் வகுத்து வருகிறது.

கடந்த 2018 -ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 100 தொகுதிகளுக்கும் மேல் வென்ற காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடித்தது. ஆனால், இந்த முறை ஆளும் கட்சி மீதான அதிருப்தி அலையை பயன்படுத்தி காங்கிரசை வீழ்த்த பாஜக வியூகம் வகுத்து வருகிறது. அதேவேளையில், கடந்த கால வரலாறுகளை மாற்றி ஆட்சியை தக்க வைப்பதில் காங்கிரசும் பல்வேறு வியூகம் வகுத்து வருகிறது.
மோடிக்கு இதே வேலை தான்: ராஜஸ்தானில் உள்ள 200 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 25 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் நெருங்கி வந்து விட்ட நிலையில், தேர்தல் களம் அனல் பறக்கிறது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் பலவும் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளன. எனினும் கணிப்புகளை பொய்யாக்கி ஆட்சியை வைக்க காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. இதனால், அங்கு தேர்தல் பிரசாரம் அனல் பறந்து வருகிறது.
இந்த நிலையில், ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் மக்களை தவறாக வழிநடத்துவதுதான் மோடி, அமித்ஷாவின் வேலை என்றும், எனவே, அவர்களின் வார்த்தை வலைகளில் நீங்கள் விழுந்து விடக்கூடாது என்று அசோக் கெலாட் பேசினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- அமித்ஷாவும் மோடியும் எங்கே போனாலும் அவர்களின் வேலையே.. மக்களை தவறாக வழிநடத்துவதுதான்.
விவசாயிகளுக்கு தனி பட்ஜெட்: எனவே, அவர்களின் வார்த்தை வலைகளில் நீங்கள் விழுந்து விடக்கூடாது. தற்போது எந்த பிரச்சினையும் இல்லை என்பதால், மதத்தின் பெயரால் பிரசாரம் செய்து வருகிறார்கள். கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தின் போது பஜ்ரங்கபலி என்ற கோஷத்தை பாஜகவினர் முன்வைத்தனர். ஆனால், அவர்களின் தந்திரங்கள் அங்கு பலிக்கவில்லை. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை அமைத்தது" என்றார்.
மேலும், பேசிய அசோக் கெலாட், ராஜஸ்தானில் நாங்கள் அளித்த 10 உத்தரவாதங்களையும் நிறைவேற்ற பணியாற்றினோம். இளைஞர்களுக்கு வேலை வழங்குவதில் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது. 3 லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்த முதல் மாநில அரசு ராஜஸ்தான் தான்" என்றார்.












Click it and Unblock the Notifications