ம.பி., ராஜஸ்தான், சட்டீஸ்கரில் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர்கள் இவர்கள்தான்!
போபால்: மத்திய பிரதேச முதல்வராக முன்னாள் மத்திய அமைச்சர் கமல்நாத்தை முன்னிறுத்த காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் 109 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்ற நிலையைில், 114 தொகுதிகளில் காங்கிரஸ் வென்றது. பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவுடன், அங்கு ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ்.
இதையடுத்து எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. அதில் கமல்நாத்தை முதல்வராக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர் மத்திய பிரதேசத்தில், பாஜகவின் பிரபல தலைவரான, 3 முறை முதல்வராக இருந்த, சிவராஜ்சிங் சவுகான் மக்கள் பலத்தை எதிர்கொள்ள தக்க ஒரே காங்கிரஸ் தலைவராக பார்க்கப்படுகிறது.
எனவே முதல்வர் ரேஸிலிருந்து ஜோதிர் ஆதித்யா சிந்தியா விலகியுள்ளார். அவரை வைத்தே, கமல்நாத் பெயரை முதல்வர் பதவிக்கு முன்மொழிய வைக்க ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார். கமல்நாத்திற்கு, திக்விஜய் சிங் ஆதரவும் உள்ளது. காந்தி குடும்பத்தோடு நெருக்கமானவர் கமல்நாத்.
இதேபோல ராஜஸ்தானில், அசோக் கெலாட் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவரான சச்சின் பைலட்டைவிட கெலாட் அனுபவம் அதிகம் உள்ளவர். கமல்நாத்தை போலவே, கூட்டணி கட்சிகளை அனுசரித்து செல்ல கூடியவர் என்பது இதற்கு காரணம்.
அறுதி பெரும்பான்மை பெற்றுள்ள சட்டீஸ்கரில், தம்ராத்வாஸ் சாகு, மாநில காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பாகேல் அல்லது மூத்த தலைவர் சிங்தியோ ஆகிய மூவரில் ஒருவர் முதல்வராக வாய்ப்புள்ளது. அதிலும் சட்டீஸ்கரில் 3 முறை தொடர்ந்து ஆட்சியை பிடித்த பாஜகவை வீட்டுக்கு அனுப்ப உழைத்த பூபேஷ் பாகேலுக்கு முதல்வராகும் யோகம் உள்ளதாக கூறப்படுகிறது.