என் மேல கம்ப்ளெயின்ட் கொடுத்தது யாரு.. ஆறுமுகசாமியிடமே கேள்வி கேட்கும் சசிகலா
ஜெயலலிதா மரண வழக்கில் என் மீது புகார் கூறியவர்கள் யார் என்று நீதிபதி ஆறுமுகசாமியிடம் சசிகலா கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
பெங்களூர்: ஜெயலலிதா மரண வழக்கில் என் மீது புகார் கொடுத்தவர்கள் யாரென்று கூறினால் மட்டுமே நீங்கள் அனுப்பிய சம்மனுக்கு என்னால் பதில் அனுப்ப முடியும் என்று நீதிபதி ஆறுமுகசாமியிடம் சசிகலா கட் அன்ட் ரைட்டாக தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா கடந்த ஆண்டு 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார். இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக மக்கள், எதிர்க்கட்சியினர் புகார் கூறினர்.
கமிஷன் உத்தரவு
இதனால் தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது. அவருக்கென எழிலகத்தில் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பான விவரங்களை பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்யலாம் என்று கமிஷன் உத்தரவிட்டிருந்தது. அதன் பேரில் தீபா, மாதவன், திமுக மருத்துவர் சரவணன் உள்ளிட்டோர் நேரடியாக சென்று பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தனர்.
முன்னாள் தலைமை செயலாளர்கள் ஆஜர்
அரசு மருத்துவர்கள், அப்பல்லோ மருத்துவர்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த பிற மருத்துவர்கள், தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், ராம் மோகனராவ் உள்ளிட்டோரை ஆறுமுகசாமி விசாரணைக்கு அழைத்திருந்தார். இவர்களில் ஷீலா பாலகிருஷ்ணனையும், டாக்டர் பாலாஜியையும் மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
பென் டிரைவ்கள் ஒப்படைப்பு
டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேலுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில் டிடிவி தினகரன், இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றம் ஆகியோர் விசாரணை கமிஷன் முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சசிகலாவும் 15 நாட்களுக்குள் ஆஜராக வேண்டும் என்று ஆறுமுகசாமி கமிஷன் மெயிலில் சம்மனை அனுப்பியது. ஆனால் சசிகலாவோ தனக்கு நேரில் சம்மன் வந்தால் பார்த்துக் கொள்வேன் என்று கூறியதாக சிறை துறையினர் தெரிவித்தனர். இதனிடையே தினகரனின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தினகரன் ஒப்படைக்க சொன்னதாக கூறி பென் டிரைவ்களை ஆறுமுகசாமியிடம் ஒப்படைத்தார்.
சம்மனுக்கு பதில் தர முடியும்
இந்நிலையில் ஜெயலலிதா மரணத்தில் தனக்கு பங்கு இருப்பதாக புகார் கொடுத்தது யார் என்று கூறினால் மட்டுமே தன்னால் சம்மனுக்கு பதில் தர முடியும் என்று நீதிபதி ஆறுமுகசாமியிடமே சசிகலா கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக சசியின் கேள்விகள் அடங்கிய மனுவை அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் நீதிபதி ஆறுமுகசாமியிடம் இன்று ஒப்படைத்தார். மேலும் தன் மீது புகார் கொடுத்தவர்களின் விவரங்களை ஆணையம் கொடுத்ததில் இருந்து 15 நாட்களுக்குள் பதில் தர தயாராக உள்ளதாகவும் சசிகலா தெரிவித்துள்ளார்.