மே.வங்கத்தில் கொடி நாட்டிய பாஜக.. 17 தொகுதிகளில் லீடிங்.. மமதாவின் கோட்டையில் பெரும் தள்ளாட்டம்!
கொல்கத்தா: மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் - பாரதிய ஜனதாவிற்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், மேற்கு வங்க மாநிலம்தான் ஹைலைட்டாக இருந்தது. ஏனெனில் மோடி மற்றும் மம்தா பானர்ஜிக்கு இடையில் நடந்த உச்சகட்ட வார்த்தை போர் தேர்தல் விறுவிறுப்பை மேலும் கூட்டியது.
இதிலும் உச்சகட்டமாக அமித்ஷா பங்கேற்ற தேர்தல் பிரச்சார பேரணியின் போது இரு கட்சியினருக்கும் இடையே மோதல் மூண்டு பெரும் கலவரமாக மாறியது. ஏராளமான பொது சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன.

வன்முறை
நாட்டில் வேறு எங்கும் நிகழாத வன்முறையை பார்த்து அரண்ட தேர்தல் ஆணையம், தேர்தல் பிரச்சாரத்தை அம்மாநிலத்தில் ஒருநாளுக்கு முன்னதாகவே முடிக்க உத்தரவிட்டது.

போட்டா போட்டி
இதனையடுத்து மேற்கு வங்க மாநில மக்களவை தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இன்று காலை முதல் துவங்கி நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் திரிணாமுல் காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. எனினும் பாரதிய ஜனதா கூடுதலாக ஒரு தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளது.

பாஜக அபாரம்
அங்கு மொத்தம் இருக்கும் 42 தொகுதிகளில் 23 இடங்களை பாஜக, கைப்பற்ற திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி பாரதிய ஜனதா 17 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் 16 இடங்களிலும், காங்கிரஸ் இரு இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.

அதிர்ச்சியில் மமதா
மோடி மற்றும் மம்தா இடையோன வார்த்தை போர் உச்சத்தை அடைந்த பின் நடைபெற்ற தேர்தலில் கிட்டத்தட்ட இரு கட்சிகளும் சம அளவில் முன்னிலை பெற்று வருவது அரசியல் நோக்கர்களிடையே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது












Click it and Unblock the Notifications