திரிபுராவில் 18 வருட ஆயுதப்படை சட்டம் அமலானது ஏன்? வாபஸ் பெறப்பட்டது ஏன்?
அகர்தலா: கடந்த 18 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த சர்ச்சைக்குரிய ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை திரிபுரா அரசு திரும்ப பெற்றுள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் பலவற்றிலும் இதுபோன்ற சட்டம் அமலில் இருக்கும் நிலையில், அவையும் படிப்படியாக விலக்கப்பட கூடும் என்ற நம்பிக்கை அம்மாநில மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டிய நோக்கம் என்ன? தற்போது அதை வாபஸ் பெற காரணம் என்ன என்பதை பார்க்கலாம்.
அமைச்சரவை முடிவு
திரிபுரா அமைச்சரவை கூட்டத்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை (AFSPA) திரும்பப்பெற ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அம்மாநில முதல்வர் மனிக் சர்க்கார் கூறுகையில், "ஒவ்வொரு ஆறு மாதங்களிலும் நாங்கள் கலவரப்பகுதிகளில் நிலைமையை மறு ஆய்வு செய்வோம். இந்த விவகாரம் குறித்து மாநில போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினருடன் ஆலோசனை நடத்துவோம். தற்போது அங்குள்ள வன்முறைகள் பெரிய அளவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால், ஆயுதப்படை சிறப்பு சட்டம் தேவையில்லை என்று அவர்கள் பரிந்துரை அளித்தனர். விரைவில் அரசிதழில் இந்த அறிவிப்பானை வெளியிடப்படும்" என்று தெரிவித்தார்.
காரணம் என்ன?
வங்கதேசத்துடன் சுமார் 85 கிலோமீட்டர் எல்லை பகுதியை கொண்ட திரிபுரா மாநிலத்தில், தீவிரவாதிகள் ஊடுருவல் அதிகரித்ததை தொடர்ந்து, 1997ம் ஆண்டில் ஆயுதப்படை சிறப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டது. அரசின் இம்முடிவால், அம்மாநில மக்கள் சுதந்திரத்தை இழந்ததை போன்ற நிலைக்கு ஆளாகினர்.
பிற மாநிலங்கள்
திரிபுரா தவிர்த்து, மணிப்பூர், அசாம் மற்றும் நாகாலாந்து ஆகிய வடகிழக்கு மாநிலங்களிலும் அருணாச்சல பிரதேசத்தின் திராப் மாவட்டத்திலும் இந்த சட்டம் அமலில் உள்ளது. ராணுவத்தின் ஆட்சி நடைபெறுவதால், அவர்கள் அத்துமீறலில் ஈடுபடுகின்றனர், பாலியல் சேட்டை நடத்துகின்றனர் என்பது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்ததால், மக்கள் போராட்டம் வெடித்தது.
இரோம் ஷர்மிளாவின் போராட்டம்
மணிப்பூர் மனித உரிமை ஆர்வல பெண்ணான, இரோம் ஷர்மிளா, 15 வருடங்களாக தொடர்ந்து, உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவருக்கு மூக்கின் வழியாக திரவ உணவு ஏற்றப்பட்டு உயிரை காத்து வருகிறது அரசு. இதுபோன்ற மனித உரிமை ஆர்வலர்களுக்கு திரிபுரா அரசின் முடிவு பெரும் வெற்றியாகும். மணிப்பூர் உள்ளிட்ட பிற மாநிலங்களும் இதே நிலைப்பாட்டை எடுத்தால், இரோம் ஷர்மிளாவின் நீண்ட போராட்டம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.
வாபஸ் காரணம்
கடந்த 5 வருடங்களில் தீவிரவாத நடவடிக்கைகள் திரிபுராவில் வெகுவாக குறைந்துள்ளன. தீவிரவாதிகள் பலர் சரணடைந்தனர். எனவே, ஆயுத சட்டத்தை அமல்படுத்த திறக்கப்பட்டிருந்த 72 காவல் நிலையங்கள் எண்ணிக்கையை கடந்த இரு ஆண்டுகள் முன்பே 30 காவல் நிலையங்களாக குறைத்தது திரிபுரா அரசு. ஆளும் இடது சாரி கட்சிக்கு, எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜகவும் இந்த விவகாரத்தில் ஆதரவு அளித்ததால் சட்டம் திரும்ப பெறப்பட்டுள்ளது.