தீவிரமாகும் தலித் போராட்டம்.. பணிந்த மத்திய அரசு.. உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் உச்ச நீதிமன்றம் செய்த மாற்றத்திற்கு எதிராக இந்தியாவின் வட மாநிலங்கள் முழுக்க தலித் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார
Recommended Video
டெல்லி: தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் உச்ச நீதிமன்றம் செய்த மாற்றத்திற்கு எதிராக இந்தியாவின் வட மாநிலங்கள் முழுக்க தலித் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
முதலில் மிகவும் சிறிய அளவு தொடங்கிய போராட்டம் இப்போது பல மாநிலங்களில் பரவி இருக்கிறது. கர்நாடகா வரையிலும் கூட இந்த போராட்டத்தின் வீச்சு பரவி உள்ளது.
இதனால் வட இந்தியாவில் பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. நிறைய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தொடக்கம்
கடந்த மார்ச் 20ம் தேதி உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியது. அதன்படி தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி இனி அரசு ஊழியர்களை கைது செய்ய முடியாது என்று கூறியது. அப்படியே கைது செய்ய வேண்டும் என்றால் அதிக கிரேட் கொண்ட அதிகாரிகள் கொடுக்கும் அனுமதியின் பேரில் மட்டுமே கைது செய்ய முடியும் என்று கூறியது.
மாற்றம்
மேலும் இதில் அரசு ஊழியர்கள் எளிதாக ஜாமீன், முன்ஜாமீன் பெறவும் வழிவகை செய்யப்பட்டது. அரசு ஊழியர் அல்லாத பொதுமக்களை கைது செய்யவும் சில கட்டுப்பாடுகளை விதித்தது. தலித் மக்கள் இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்த கூடாது என்ற நோக்கத்தின் பேரில் இந்த சட்டத்தில் மாறுதல்கள் கொண்டு வரப்பட்டது.
போராட்டம்
ஆனால் இந்த மாறுதல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் குறிக்கோளை கேள்விக்குறியாக்குவதாக கூறி தலித் மக்கள் போராட தொடங்கினார்கள். குஜராத்தில் சில நாள் முன்பே இந்த போராட்டம் தொடங்கியது. இன்று இந்தியா முழுக்க பந்த் செய்ய அவர்கள் அழைப்பு விடுத்து இருக்கிறார்கள்.
பெரிய கலவரம்
இதில் மத்திய அரசு தலையிட்டு முடிவு காணவேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தார்கள். அதே சமயத்தில் ராஜஸ்தான், டெல்லி, குஜராத், ஹரியானா, உத்தர பிரதேசம், ஜார்கண்ட், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் இந்த போராட்டம் பரவியது. அதோடு இந்த போராட்டம் பல இடங்களில் கலவரத்தை ஏற்படுத்தியது.
மனுத்தாக்கல்
இந்த நிலையில் மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்று செய்துள்ளது. அதில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் உச்ச நீதிமன்றம் செய்த மாற்றத்தை திரும்ப பெற கோரியுள்ளது. உச்ச நீதி மன்றம் செய்து இருக்கும் மாற்றம், அந்த சட்டத்தின் தேவையையே கேள்வி குறியாக்கும் என்று மனுவில் கூறப்பட்டு இருக்கிறது.