மோடியால் கூட முடியவில்லை.. குஜராத்தில் பாஜகவால் ஒரு முறை கூட வெல்ல முடியாத தொகுதிகள்! என்ன காரணம்
காந்திநகர்: சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாகக் குஜராத்தில் பாஜக ஆதிக்கம் செலுத்தும் போதிலும், இன்னும் கூட அக்கட்சியால் சில இடங்களை ஒரு முறை கூட வெல்ல முடியவில்லை. அதற்கான காரணத்தைப் பார்க்கலாம்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, பெரும்பாலான மாநிலங்களில் முதலில் காங்கிரஸ் கட்சியே ஆட்சியில் இருந்தது. இதில் குஜராத்தும் விதிவிலக்கு இல்லை. அந்தச் சூழலில் நாட்டில் காங்கிரஸை எதிர்க்க வலுவான கட்சி எதுவும் இல்லை.
மேலும், தேர்தல் அரசியலைத் தாண்டி சுதந்திரப் போராட்டத்தில் பங்குகொண்ட கட்சி என்பதால் இயல்பாகவே காங்கிரஸ் கட்சிக்கு அப்போது செல்வாக்கு அதிகம் இருந்தது. இதனால் தான் காங்கிரஸால் எளிதாக வாக்குகளைப் பெற முடிந்தது.

குஜராத்
ஆனால், இவை எல்லாம் 1980கள் வரை தான். அதன் பின்னர், நாட்டின் அரசியல் களம் மெல்ல மாற தொடங்கியது. ஜனதா கட்சியின் சோதனை முயற்சி பலருக்கும் ஒரு நம்பிக்கை தந்தது. காங்கிரஸுக்கு எதிரான கொள்கையில் களமிறங்கிய ஜனதா தளம், ஓபிசி வாக்குகளை ஒன்றிணைத்துப் பல மாநிலங்களில் அரசியல் மாற்றத்திற்கு வித்திட்டது. இந்த நேரத்தில் தான் இந்துக்களின் வாக்கை ஒருங்கினைக்க ஒரு கட்சி வேண்டும் என்று அத்வானி நினைத்தார். இதற்காகப் பல யாத்திரைகளையும் கூட அவர் நடத்தினார். இதன் மூலம் ஜனதா தளம் மற்றும் பாஜக என இரு கட்சிகளும் வளர தொடங்கியது. குஜராத், உத்தரப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் காங்கிரஸ் வரிசையாக ஆட்சியை இழந்தது.

8 தொகுதிகள்
குஜராத்தில் 2000களில் உருவெடுத்த நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆகியோர், குஜராத்தில் அத்வானியின் இந்துத்துவா அரசியலை மேலும் தீவிரப்படுத்தினர். அவர்கள் குஜராத்தை பாஜகவின் கோட்டையாகவே மாற்றிவிட்டனர். சுமார் 27 ஆண்டுகள் குஜராத்தை பாஜக ஆட்சி செய்து உள்ளது. ஆனால், ஆச்சரியம் என்னவென்றால் 30 ஆண்டுகளாக ஆகியும் இன்னும் கூட பாஜக மற்றும் முந்தைய பாரதிய ஜன சங்கத்தில் குஜராத்தில் சில இடங்களை ஒரு முறை கூட வெல்ல முடியவில்லை. குஜராத்தின் போர்சாத், ஜகாடியா, வியாரா, பிலோடா (1995 தவிர), மஹுதா, அங்கலவ், டானிலிம்டா, கர்படா ஆகிய 8 தொகுதிகளில் பாஜகவால் ஆதிக்கத்தைச் செலுத்த முடிவதில்லை. இந்த இடங்களில் வெல்ல பாஜக எவ்வளவோ முயன்றும் பாஜகவுக்கு இன்னும் வெற்றி வரவில்லை. இது தவிர இன்னும் சில இடங்களை ஓரிரு முறை மட்டுமே வென்றுள்ளது.

வெல்ல முடியவில்லை
அடுத்த மாதம் குஜராத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த முறையாவது இந்த இடங்களில் பாஜகவால் வெல்ல முடியுமா என்பதைப் பொறுத்துத் தான் பார்க்க வேண்டும். அதற்கு முன் ஒரு சின்ன ஹிஸ்டரி. அப்போது இருந்த பாம்பே மாகாணத்தின் ஒரு பகுதி தான் குஜராத் மாநிலமாக 1960இல் உருவாக்கப்பட்டது. அதன் பின் 1962இல் நடந்த தேர்தல் தொடங்கி 1975 வரை குஜராத்தில் காங்கிரஸ் தான் ஆட்சியில் இருந்தது. அப்போதும் மேலே சொன்ன இடங்களில் காங்கிரஸ் மட்டுமே வென்றது. இந்திரா காந்தி அதன் பின்னர் 1975இல் கொண்டு வந்த எமர்ஜென்ஜி நிலை தான் நாட்டின் அரசிலை புரட்டிப் போட்டது. அதுநாள் வரை காங்கிரஸில் இருந்த பல மூத்த தலைவர்களும் இந்திரா காந்தியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என முடிவு செய்து ஜனதா கட்சியைத் தொடங்கினர்.

தேசிய அரசியல்
இந்திரா காந்தி பதவியை இழந்த போதிலும், ஜனதா கட்சியால் நீண்ட காலம் ஆட்சியில் இருக்க முடியவில்லை. அக்கட்சியில் இருந்து விலகிச் சென்ற ஜனசங்க தலைவர்கள் 1980இல் பாஜகவைத் தொடங்கினர். இருப்பினும், 1980 மற்றும் 1985இல் குஜராத்தில் இன்னும் கூட காங்கிரஸ் கட்சியே வென்றது. அதிலும் குறிப்பாக 1985இல் பாஜக மொத்தம் 55% வாக்குகளைப் பெற்றது. இன்னும் கூட பாஜகவால் காங்கிரஸ் பெற்ற இந்த 55% வாக்குகளை எட்ட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் தேசிய அரசியலில் நடந்த மாற்றங்கள் குஜராத் அரசியலிலும் மெல்ல எதிரொலிக்கவே செய்தது.

நரேந்திர மோடி
1990இல் காங்கிரஸுக்கு எதிராக இருக்கும் அனைத்து கட்சிகளும் ஒரே அணியில் சேர காங்கிரஸால் வெறும் 33 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. அப்போதும் கூட அந்த 8 இடங்களில் பாஜகவால் வெல்ல முடியவில்லை. அதன் பின்னர் காங்கிரஸால் குஜராத்தில் ஆட்சியைப் பிடிக்கவே முடியவில்லை. கேசுபாய் படேல் சில ஆண்டுகள் குஜராத் முதல்வராக இருந்த நிலையில், அவர் மீதான அதிருப்தி அதிகரித்தது. இதனால், நரேந்திர மோடி அங்கு முதல்வராக ஆக்கப்பட்டார். அதன் பிறகு நடந்த அத்தனை தேர்தல்களிலும் பாஜகவே வென்றது. இருந்த போதிலும், அந்த 8 தொகுதிகளில் இந்துத்துவ அரசியல் சுத்தமாக எடுபடவில்லை. அங்கு பாஜக வேட்பாளர்களால் ஒரு முறை கூட வெல்ல முடியவில்லை.

என்ன காரணம்
ஆட்சியைத் தக்க வைக்கும் போதிலும், பாஜகவால் ஏன் இந்தத் தொகுதிகளில் வெற்றி பெற முடியவில்லை? ஏனென்றால் இந்தப் பகுதிகளில் பழங்குடியின மக்களே அதிகம். சில தொகுதிகள் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டும் உள்ளது. குஜராத்தில் இப்படி மொத்தம் 27 தொகுதிகளின் வெற்றி தோல்வியைப் பழங்குடியினர் தீர்மானிக்கிறார்கள். இந்துத்துவா அரசியலைப் பழங்குடியினர் நிராகரித்தே இதற்கு முக்கிய காரணம். ஏனென்றால் பழங்குடியினரின் பழக்கவழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகள் பெரும்பாலும் வலதுசாரி பிரசாரத்திற்கு எதிராக இருந்து வருகிறது. பழங்குடியினர் மட்டுமன்றி தலித்துகள், முஸ்லீம்களின் வாக்குகளையும் பாஜகவால் பெற முடியாமல் போக இதுவே காரணம்.

பாஜக பிளான்
கடந்த 2017 குஜராத் தேர்தலில் முதல்முறையாகப் பழங்குடியினர் இடங்களில் 8ஐ பாஜக வென்றது. இப்போது பழங்குடியின இனத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு குடியரசுத் தலைவராக்கப்பட்டுள்ளார். அதேபோல ஆம் ஆத்மியும் குஜராத்தில் களமிறங்குகிறது. ஆம் ஆத்மி காங்கிரஸ் வாக்குகளைப் பிரிக்கும் என பாஜக நம்புகிறது. அப்படி நடந்தால் பழங்குடியின தொகுதிகளில் அப்படியே கைப்பற்ற முடியும் என பாஜக நம்புகிறது.

என்ன நடக்கும்
இருப்பினும், ஆம் ஆத்மி வாக்குகளைப் பிரிப்பது பாஜகவுக்கு எதிராகவும் கூட போய்விடலாம். ஏனென்றால், ஆம் ஆத்மிக்கு நகர்ப்புறங்களில் தான் வாக்கு அதிகம். இவை பாஜக வலுவாக உள்ள பகுதிகளாகும். எனவே, ஆம் ஆத்மி வாக்கைப் பிரிப்பது பாஜகவுக்குப் பின்னடைவையும் தரலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். என்ன நடந்தாலும் இந்த 8 தொகுதி மக்கள் இந்த முறை யாருக்கு வாய்ப்பு தருவார்கள் என்பதை நாம் பொறுத்துத் தான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications