சசிகலாவை பொதுச் செயலாளராக நியமித்தபோது ஓபிஎஸ் கையெழுத்திட்டது ஏன்? தம்பிதுரை கேள்வி
சசிகலாவை பொதுச் செயலாளராக நியமித்ததற்கான ஆவணத்தில் ஓ.பன்னீர் செல்வமும், அவருடன் உள்ளவர்களும் கையெழுத்திட்டது ஏன் என்று லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி: அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலாவை ஒருமனதாக தேர்வு செய்ததற்கான கோப்புகளில் ஓ.பன்னீர் செல்வம் கையெழுத்திட்டது ஏன் என்று லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரை கேள்வி எழுப்பினார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்ற வேண்டும் என்று சசிகலா காய்நகர்த்தி வந்தார். அதன்படி, கட்சியும் வேண்டாம், பதவியும் வேண்டாம் என்று கூறியபடியே அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா கடந்த டிசம்பர் மாத இறுதியில் தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர் கட்சியும், ஆட்சியும் ஒருவரின் கையிலேயே இருக்க வேண்டும் என்றும் முதல்வராக உள்ள ஓ.பன்னீர் செல்வம் ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் மறைமுகமாக சசிகலாவின் ஆதரவு அமைச்சர்களும், நிர்வாகிகளும் தொடர் பேட்டியளித்தனர்.
இந்நிலையில் சசிகலாவின் துரதிருஷ்டம், சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தை அணுகியது.
இதுகுறித்து டெல்லியில் தம்பிதுரை கூறுகையில், சசிகலாவை பொதுச் செயலாளராக நியமனம் செய்த போது அதிமுக பொருளாளராக ஓ.பன்னீர் செல்வம் இருந்தார் என்பதை அவரால் மறுப்பு முடியுமா?
அதேபோல் சசிகலாவை அதிமு பொதுச் செயலாளராக செயற்குழு, பொதுக் குழு கூட்டி பெரும்பான்மை ஆதரவுடன் நியமிக்கப்பட்டார். அதற்கான கோப்பில் ஓ.பன்னீர் செல்வமும், அவருக்கு ஆதரவாக உள்ள அனைவரும் கையெழுத்திட்டனர். அது ஏன்?
பொதுச் செயலாளர் இல்லை என்றால் அவைத் தலைவர்தான் கட்சிப்பணிகளில் ஈடுபட வேண்டும் என்று தற்போது கூறும் அவைத் தலைவர் மதுசூதனன் அச்சமயம் என்ன செய்து கொண்டிருந்தார்? என்று தம்பிதுரை கேள்வி எழுப்பினார்.