48 மணி நேரத்தில் இந்தியாவை முடக்க பார்த்த பாகிஸ்தான்! 8 மணி நேரத்தில் அவுங்க கதை காலி- தலைமை தளபதி
புனே: இந்தியாவை இரண்டு நாட்களில் முடக்கப் பாகிஸ்தான் தீட்டிய திட்டம் வெறும் எட்டு மணி நேரத்தில் தோல்வியடைந்த நிலையில், பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது ஏன்.. அப்போது என்ன நடந்தது என்பது குறித்த சில முக்கிய தகவல்களை முப்படைகளின் பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான் கூறினார்.
கடந்த மே மாதம் 7ஆம் தேதி அன்று, பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா துல்லியமான தாக்குதல் நடத்தியது. இந்த ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பாகிஸ்தானால் ஏவப்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இந்திய எல்லை பகுதிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக அமைந்தது.

ஜெனரல் சவுகான்
இது தொடர்பாக புனே பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய ஜெனரல் அனில் சவுகான், "பாகிஸ்தான் மே 10 அன்று பல தாக்குதல்களை நடத்தியது.. பாகிஸ்தானின் நோக்கம் என்னவாக இருந்தது தெரியுமா.. வெறும் இரண்டு நாட்களில் இந்தியாவை முடக்குவதுதான் அவர்களின் திட்டம். ஆனால் அது வெறும் 8 மணி நேரத்தில் முடிவுக்கு வந்தது. பாகிஸ்தானின் திட்டம் தோல்வியடைந்ததால், போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது.
ஒரு கால்பந்து போட்டியில் 3-2 என்று வெற்றி பெற்றால், யார் எத்தனை கோல் போட்டார்கள் என்பது முக்கியமல்ல. அதேபோல், டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால், எத்தனை விக்கெட் எடுத்தார்கள், எத்தனை பந்துகள் எஞ்சியிருந்தன என்பது முக்கியமல்ல. இருப்பினும், உங்கள் தாக்குதலின் விளைவு என்ன என்பது அனைவருக்கும் தெரிய வேண்டும். மின்னணு நுண்ணறிவு, சமிக்ஞை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்ப அடிப்படையில், நாங்கள் விரைவில் ஒரு அறிக்கையை வெளியிடுவோம். அதில் எத்தனை விமானங்களை அழித்தோம், எத்தனை ரேடார்களை அழித்தோம் போன்ற விவரங்கள் இருக்கும்." என்றார்.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி, இந்த மிஷன் இன்னும் முடியவில்லை என்று பாகிஸ்தானுக்கு எச்சரித்திருந்தார். இதற்கிடையே ஜெனரல் சவுகானும் இப்போது அதே கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை குறிப்பிட்ட அவர், இது தற்காலிக போர் நிறுத்தம் தான் என்றும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
என்ன நடந்தது?
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து, இந்தியா மே 7ம் தேதி துல்லியமான தாக்குதல்களை நடத்தியது. இந்த நடவடிக்கைக்குப் பிறகு, பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் அதற்குக் கடுமையான பதிலடி தரப்படும் என்று இந்தியா எச்சரித்தது.
கட்டாயம் ஏற்பட்டது
ஜெனரல் சவுகான் மேலும் கூறுகையில், "மே 7ம் தேதி நடத்தப்பட்ட துல்லியமான தாக்குதல்கள் குறித்து பாகிஸ்தானுக்குத் தெரிவித்தோம். அப்போதே பாகிஸ்தான் எங்களைத் தாக்கினால், ராணுவ தளங்களைக் குறிவைத்துத் தாக்கினால்.. நாங்கள் அவர்களைத் திருப்பித் தாக்குவோம்.! தாக்குதல் கடுமையாக இருக்கும் என்று கூறினோம். அதன் பிறகு பாகிஸ்தான் போர் நிறுத்தம் கோரி இந்தியாவுக்கு அழைப்பு விடுத்ததை அடுத்து, இரு தரப்புக்கும் இடையே ஒரு புரிதல் ஏற்பட்டது. பாகிஸ்தான் வேகமாக இழப்புகளைச் சந்தித்ததால் இந்தியாவுக்கு போன் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது" என்றார்.
பாகிஸ்தான் விரைவாகப் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க இரு காரணங்கள் இருப்பதாக அனில் சவுகான் குறிப்பிட்டார். ஏற்கனவே அவர்களுக்கு அதிக இழப்புகள் இருந்த நிலையில், மோதல் தொடர்ந்தால் இழப்புகள் அதிகரிக்கும் என்பதாலேயே போர் நிறுத்தம் செய்ய இந்தியாவைத் தொடர்பு கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
48 மணி நேரத் திட்டம்
ஜெனரல் சவுகன் இது தொடர்பாகக் கூறுகையில், "மே 10 அதிகாலை 1 மணிக்கு, அடுத்த 48 மணி நேரத்தில் இந்தியாவை முடக்குவதே அவர்களின் நோக்கமாக இருந்தது. இதனால் இந்தியா மீது பல தாக்குதல்கள் தொடங்கப்பட்டன. நாங்கள் பயங்கரவாத இலக்குகளை மட்டுமே தாக்கியிருந்தோம். ஆனால் அவர்கள் இந்த மோதலை தீவிரப்படுத்தினர்.
மொத்தத்தில், இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தி, இரண்டு நாட்களில் இந்தியாவை முடக்குவதே பாகிஸ்தானின் நோக்கமாக இருந்தது. பாகிஸ்தானின் திட்டம் தோல்வியடைந்ததால், போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. ஆனால், ஒரு விஷயத்தை நாம் மறந்துவிட வேண்டாம்.. ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை. இது தற்காலிக போர் நிறுத்தம் மட்டுமே" என்றார்.












Click it and Unblock the Notifications