கர்நாடக அனைத்துக் கட்சி கூட்டத்தை பாஜக புறக்கணித்தது ஏன்? அரசுக்கு எதிராக மக்களை தூண்ட திட்டமா?
பெங்களூர்: காவிரி விவகாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், திடீரென திரையில் இருந்து வெளியே கிளம்ப பார்க்கிறது கர்நாடக பாஜக. ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு கன்னட மக்களிடம் நற்பெயர் போய்விடக்கூடாது என்பது இதற்கு ஒரு காரணமாக இருக்கும் என்று தெரிகிறது.
காவிரி நதி நீரிலிருந்து தமிழகத்திற்கு உரிய பங்கை கேட்டு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா, அனைத்துக் கட்சி கூட்டங்களை அவ்வப்போது அழைத்து ஆலோசனை நடத்தினார்.
சுப்ரீம் கோர்ட் முதலில் 15 ஆயிரம் கன அடி தண்ணீர், பிறகு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் விட உத்தரவிட்டபோதெல்லாம் அனைத்து கட்சி கூட்டத்தை சித்தராமையா கூட்டியிருந்தார்.
அப்போதெல்லாம், கர்நாடக பாஜக சார்பில் கூட்டத்தில் பங்கேற்ற எடியூரப்பா, எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் போன்றோர், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடாதீர்கள். சட்ட சிக்கலை எதிர்கொள்ள தயாராகுங்கள். உங்களுக்கு ஆதரவாக நிற்கிறோம் என்று தெரிவித்தனர். மதசார்பற்ற ஜனதாதள கட்சியினரும், இதேகோரிக்கையை முன்வைத்தனர்.
ஆனால், சித்தராமையா அரசோ, உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்தால், அக்டோபரில் நடைபெற உள்ள இறுதி விசாரணையின்போது நமக்கு பின்னடைவாகிவிடும் என்று கூறி, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டது.
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில், சிக்கலில் மாட்டியுள்ள கர்நாடக அரசு இன்று மாலை அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. இதில் பாஜக பங்கேற்காது என அதன் கர்நாடக மாநில தலைவர் எடியூரப்பா தெரிவித்தார்.
தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட கூடாது என்ற முடிவை இன்று சித்தராமையா அரசு எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் இது காலம் தாழ்ந்த முடிவு என கூறி கன்னட மக்களின் கோபத்தை தூண்ட பாஜக திட்டமிட்டுள்ளது. நாங்கள் கூறும்போதே கர்நாடக அரசு அந்த முடிவை எடுத்திருக்க வேண்டும், ஆனால் இப்போது தண்ணீர் முழுக்க காலியாகிவிட்டது என்று பழிபோட பாஜக தயாராகிவருவதாக கூறப்படுகிறது.
எனேவதான் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பதை தவிர்க்க எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர் முடிவு செய்துள்ளனர். எடியூரப்பா ஷிமோகாவிலும், ஷெட்டர் ஹூப்ளியிலும் உள்ளனர்.