கூவத்தூர் பாணியில் ரிசார்ட்... சசிகலா ஸ்டைலில் போனை பறிக்காத காங்கிரஸ்... இதுதான் பின்னணி
ஹைதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த எம்எல்ஏக்களின் போனை காங்கிரஸ் கட்சி பறிக்காதது ஏன் என்பது குறித்த காரணம் வெளியாகியுள்ளது.
பெங்களூர்: கர்நாடகத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பையொட்டி ஹைதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த எம்எல்ஏக்களின் போன்களை காங்கிரஸ் கட்சி பறிக்காதது , பாஜக பேரம் பேசும் ஆடியோவை வெளியிடுவதற்காகத்தான் என்று கூறப்படுகிறது.
கர்நாடகத்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து காங்கிரஸ்- ஜேடிஎஸ் ஆட்சியை பிடிக்க இணைந்தது. இதற்காக குமாரசாமிதான் முதல்வர் என்று சோனியா, தேவகௌடாவிடம் டீல் பேசினார்.
எனினும் இவர்கள் உரிமை கோரியதற்கு மத்தியில் எண்ணிக்கையின் அடிப்படையில் எடியூரப்பாவை முதல்வராக பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

காங்கிரஸ் எம்எல்ஏக்கள்
பெங்களூர்- மைசூரு சாலையில் உள்ள ஈகிள்டன் ரிசார்டில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அதுபோல் அங்கிருந்து ஹைதராத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். பாஜக தலைவர்கள் வீசும் வலையில் இவர்கள் யாரும் சிக்கிவிட கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு. இது காலங்காலமாக நடந்து வரும் நடைமுறைதான்.

வெளியுலக தொடர்பின்றி
பொதுவாக இதுபோல் எம்எல்ஏக்கள் ரிசார்டுகளில் சிறை வைக்கப்பட்டால் அவர்களிடம் இருந்து செல்போன், மடிகணினி உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்கள் பறிக்கப்படும். கூவத்தூரில் தங்கவைக்கப்பட்டிருந்த அதிமுக எம்எல்ஏக்களின் செல்போன்கள் பறிக்கப்பட்டு அவர்கள் கிட்டதட்ட 7 நாட்களும் அதாவது நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் வரை வெளியுலக தொடர்பே இல்லாமல் இருந்தனர். நேரிலும் இவர்களை யாரும் அண்டக் கூடாது என்பதற்காக குண்டர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

செல்போன் பறிக்கவில்லை
ஈகிள்டன் , ஹைதராபாத் ரிசார்ட்டுகளில் தங்க வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்களின் செல்போன்கள் பறிக்கப்படவில்லை. அனைத்து எம்எல்ஏக்களும் சுதந்திரமாக செல்போனை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது.

ஏன் செல்போன் பறிக்கவில்லை
ஆள் பிடிக்கும் பாஜகவை சிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே செல்போன் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது. எம்எல்ஏக்களுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கூறியது இதுதான், செல்போனை பயன்படுத்துங்கள், யாருடைய போன் கால்களை எடுப்பீர்களோ இல்லையோ பாஜக தலைவர்கள் பேசும் போன் கால்களை எடுத்து அவர்கள் பேசுவதை ரெக்கார்டு செய்ய வேண்டும் என்பதுதான் நிபந்தனை. பொத்தாம் பொதுவாக குதிரை பேரம் என்றால் ஆதாரம் கேட்பார்கள் என்பதற்காகவே காங்கிரஸ் இதுபோன்ற வேலையில் ஈடுபட்டது.

பாஜகவுக்கு அவப்பெயர்
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் எடியூரப்பாவின் மகன், எடியூரப்பா, பாஜக மூத்த தலைவர் ஜனார்த்தன ரெட்டி உள்ளிட்டோர் பேசிய ஆடியோக்களை காங்கிரஸ் சமயோஜிதமாக வெளியிட்டு அவர்களது கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியது. மேலும் அவப்பெயர் ஏற்படாமல் இருக்கவே நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக கலந்து கொள்ளாத வகையில் எடியூரப்பாவை முதல்வர் பதவியிலிருந்து விலகுமாறு பாஜக தலைமை கூறியது. பாஜக விரித்த வலையில் அவர்களாகவே விழும்படி காங்கிரஸ் செய்துவிட்டது. பாஜக தங்கள் கட்சி எம்எல்ஏக்களை தலா ரூ.100 கோடி வரை பேரம் பேசுவதாக குமாரசாமியும் பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார்.












Click it and Unblock the Notifications