கடனை அடைக்க இப்படியொரு யோசனையா? இன்சூரன்ஸ் பணத்திற்காக மனைவியை கொன்ற கணவன்
போபால்: மத்திய பிரதேசத்தில் இன்சூரன்ஸ் பணத்திற்காக தன் மனைவியை கொன்ற கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தின் ராஜ்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் பத்ரிபிரசாத் மீனா. இவர் தனது மனைவி பூஜா என்பவருடன் ராஜ்கர் அருகே வசித்து வந்தார்.
இந்நிலையில், பத்ரிபிரசாத் மீனா தனது வரம்பை மீறி கடன் வாங்கியதாக தெரிகிறது. மேலும் அவர் தான் வாங்கிய கடனை திருப்பி கட்ட முடியாமல் தவித்து வந்துள்ளார்.

குறுக்கு வழி எதுவும் உள்ளதா?
இதனால் ஒரு பக்கம் கடன்காரர்கள் இவரை கடனை அடைக்குமாறு நெருக்கியதாக தெரிகிறது. எனவே, கடனை அடைக்க என்ன செய்யலாம் என்று தீவிர யோசனையில் மூழ்கி கிடந்துள்ளார். இதற்காக அவர் இணையங்களில் தொடர்ந்து கடனை அடைக்க குறுக்கு வழி எதுவும் உள்ளதா? என தேடி வந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது, திடீரென தனது மனைவி பூஜா இன்சூரன்ஸ் கட்டி வந்த நியாபகம் வந்துள்ளது. இதை உற்று கவனித்த பத்ரிபிரசாத் மீனா இந்த பணத்தை எடுத்து நாம் கடனை அடைத்து விடலாம் என்று நினைத்துள்ளார்.

மாட்டிக்கொள்ளாமல் செயல்படுத்துவது எப்படி?
ஆனால் மனைவி இறந்தால் தான் அந்த பணம் கைக்கு கிடைக்கும் என அவருக்கு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து தான் அவருக்கு விபரீத யோசனை ஏற்பட்டுள்ளது. ஆம் விடிய விடிய யோசனை செய்த அவர் இறுதியில் மனைவியை கொன்று விட்டு இன்சூரன்ஸ் பணத்தை எடுத்துக்கொள்ள வேண்டியது தான் என நினைத்துள்ளார். மேலும் இந்த திட்டத்தை எப்படி கச்சிதமாக, மாட்டிக்கொள்ளாமல் செயல்படுத்துவது என மீண்டும் யோசனையில் ஈடுபட்டுள்ளார். அதற்காக அவர் இணையதளம் முழுவதும் பல்வேறு வீடியோக்களை பார்த்துள்ளார்.

மனைவியை கொன்றார்
இதைத் தொடர்ந்து கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இன்றி தாலி கட்டிய மனைவி என்றும் பாராமல் பணத்திற்காக துப்பாக்கியால் பூஜாவை பத்ரிபிரசாத் மீனா சுட்டுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த மனைவி பூஜா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியிருக்கிறார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பூஜா சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், பத்ரிபிரசாத் மீனாவிடம் கொலை சம்பவம் குறித்தும், கொலையாளிகள் குறித்தும் விசாரணை நடத்தியுள்ளனர். முதலில் போலீசாரின் கவனத்தை திசை திருப்ப பல பொய்க்கதைகளை பத்ரிபிரசாத் மீனா கூறியுள்ளார்.

சிறையில் அடைத்தனர்
மேலும் தனது மனைவியை கொன்றுவிட்டதாக 4 பேர் மீது புகாரும் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், போலீசாருக்கு திடீர் சந்தேகம் ஏற்பட்டது. இதனால், பத்ரிபிரசாத்திடம் மீண்டும் விசாரணை நடத்தினர். ஆனால், பத்ரிபிரசாத் மீனா அளித்த தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததால், போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில், உண்மையை கக்கிய பத்ரிபிரசாத் மீனா பணத்திற்காக மனைவியை சுட்ட்டுக்கொன்றதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, பத்ரிபிரசாத் மீது கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். அவரது கூட்டாளி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தலைமறைவாக உள்ள இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications