வங்கதேச விவகாரம்.. திருப்பூர் பின்னலாடை வர்த்தகத்துக்கு சாதகமாகுமா?
டாக்கா: வங்கதேச உள்நாட்டுப் பிரச்னை மற்றும் அரசியல் அசாதாரண சூழல், திருப்பூர் பின்னலாடை வர்த்தகத்துக்கு சாதகமாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு பின்னலாடை உற்பத்தியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்தியாவில் இருந்தே பின்னலாடை வர்த்தகத்துக்கான மூலப்பொருள்கள் அனைத்தும் வங்கதேசத்துக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. இந்நிலையில், அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்னை திருப்பூர் பின்னலாடை வர்த்தகத்துக்கு கைகொடுக்க வாய்ப்புள்ளதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான சுதந்திரப் போரில் பங்கேற்று உயிரைத் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறை அமலில் இருந்தது. கடந்த 2018 இல் மாணவர்களின் போராட்டம் காரணமாக இந்த முறை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், 30 சதவீத இடஒதுக்கீடு முறை மீண்டும் அமல்படுத்தப்படும் என்று பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார்.

வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் மத்தியில் போராட்டம் வெடித்தது. இதைத்தொடர்ந்து, அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த 5ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். உயிருக்கு பயந்து ஷேக் ஹசீனா உடனே வங்கதேசத்தில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். ஷேக் ஹசீனா மற்றும் அவரது தங்கை ரெஹானாவும் மத்திய அரசின் பாதுகாப்பில் ரகசிய இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
வங்கதேசத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் பின்னலாடை உற்பத்தி மற்றும் ஜவுளித் தொழில் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது. அந்நாட்டு பின்னலாடைத் தொழில் நிறுவனங்கள் திருப்பூரின் ஏற்றுமதி நாடுகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சந்தையைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு பிரச்னை இந்தியாவின் பின்னலாடை வர்த்தகத்தை மீண்டும் உயிர்ப்பிக்குமா என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடமும் எழுந்துள்ளது. ஆனால், வங்கதேசப் பிரச்னையால் இதுவரை எந்தவிதமான மாற்றமும் பின்னலாடை வர்த்தகத்தில் ஏற்படவில்லை, பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றே சங்கங்கள் காத்திருக்கின்றன.
இதுகுறித்து, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் சுப்பிரமணியன் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: "வங்கதேசத்தில் மிகப்பெரிய உள்நாட்டு பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது நம் நாட்டின் பின்னலாடை வர்த்தகத்தின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமா என உறுதியாகச் சொல்ல முடியாது. புதிய அரசு பதவி ஏற்கும்வரை காத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆர்டர் வருவது குறித்து இதுவரை எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை. ஒருவாரம் கழித்துதான் உறுதியான தகவல் தெரியவரும். ஆனால், வங்கதேசப் பிரச்னை இதுவரை எந்தவிதமான தாக்கத்தையும் பின்னலாடை வர்த்தகத்தில் ஏற்படுத்தவில்லை," என்றார்.












Click it and Unblock the Notifications