ஜெ. ஜாமீன் மனு மீதான விசாரணை மீண்டும் எப்போது வரும்? கிழமையில் குழப்பம்
பெங்களூர்: ஜெயலலிதா மீதான ஜாமீன் மனு விசாரணை திங்கள்கிழமை நடைபெறுமா அல்லது, செவ்வாய்க்கிழமை நடைபெறுமா என்பது இன்னும் குழப்பம் நிலவி வருகிறது.
ஹைகோர்ட் விடுமுறைக்கால சிறப்பு நீதிபதி ரத்தினகலா இன்று ஜெயலலிதா ஜாமீன் மனுவை மீண்டும் விசாரித்தார். ஆனால் கோர்ட் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே, ரெகுலர் கோர்ட்டிலேயே இது விசாரிக்கப்பட வேண்டும் என்று ரத்தினகலா, கூறிவிட்டு கிளம்பி சென்றுவிட்டார். அதிமுக வக்கீல்கள் எவ்வளவோ முயன்றும் நீதிபதி வழக்கை ஒத்திவைத்துவிட்டு உடனடியாக கிளம்பிவிட்டதாக கூறப்படுகிறது.
இப்போது ரெகுலர் கோர்ட் எப்போது ஆரம்பிக்கும் என்பதில் குழப்பம் நீடிக்கிறது. கர்நாடக ஹைகோர்ட்டில் தற்போது தசரா விடுமுறை நடந்து வருகிறது. இதனால் விடுமுறைக்கால கோர்ட் மட்டுமே செயல்படுகிறது. தசரா விடுமுறை முடிந்து, திங்கள்கிழமை ரெகுலர் கோர்ட் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திங்கள்கிழமை பக்ரித் பண்டிகை கொண்டாடப்படுவதால், அன்று அரசு விடுமுறை.
எனவே, செவ்வாய்க்கிழமைதான் வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஹைகோர்ட்டுக்கு இதுவரை பக்ரித் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. ஒருவேளை ஹைகோர்ட்டுக்கு பக்ரித் விடுமுறை அறிவிக்கப்படவில்லை என்றால் வழக்கு திங்கள்கிழமைக்கு வரும். ஆனால் அதற்கு வாய்ப்பு குறைவு என்கின்றனர் நீதிமன்ற வட்டாரத்தில். எப்படியும் இந்த வார இறுதிக்குள் பக்ரித் விடுமுறையை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஹைகோர்ட் வெளியிடும் என்கின்றனர்.