நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜகவுக்கு எதிராக வாக்களித்த சிவேசனா, ஒதுங்கிக் கொண்ட பவார் கட்சி
மும்பை: மஹாராஷ்டிரா சட்டசபையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தேசியவாத காங்கிரஸ் கட்சி பங்கேற்கவில்லை.
மஹாராஷ்டிரா சட்டசபையில் மைனாரிட்டி பாஜக அரசு இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை கோரியது. 288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபையில் பாஜக அரசுக்கு 122 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அது தனது பெரும்பான்மையை நிரூபிக்க கூடுதலாக 23 எம்.எல்.ஏ.க்கள் தேவைப்பட்டது.
பாஜக அரசுக்கு 7 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஒரு எம்.எல்.ஏ.வை கொண்ட ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா ஆகியவை ஆதரவு தெரிவித்தனர்.
இன்று மஹாராஷ்டிரா சட்டசபையில் பாஜக அரசு பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு குரல் வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் உத்தரவிட்டார். இதற்கு காங்கிரஸ், சிவசேனா எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த குரல் வாக்கெடுப்பில் பாஜகவுக்கு ஆதரவு தருவதாக கூறிய தேசியவாத காங்கிரஸ் கலந்து கொள்ளவில்லை. காங்கிரஸ் கட்சியும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
பாஜகவுடன் பலமாக பேரம் பேசி தோல்வி கண்ட சிவசேனாவோ எதிராக வாக்களித்தது. இப்படியான சூழலில் பாஜக அரசு பெரும்பான்மையைப் பெற்று நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.
முன்னதாக பாஜக சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தபோதே மஹாராஷ்டிரவில் நிலையான அரசு அமைய பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க தயார் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது. மேலும் இன்றைய வாக்கெடுப்பில் கலந்து கொள்ளப்போவதாகவும் அக்கட்சி அறிவித்திருந்தது.
ஆனால் அறிவித்தபடி அக்கட்சி வாக்களிக்கவில்லை. நாங்கள் ஆதரவு தருகிறோம் என்று தேசியவாத காங்கிரஸ் பலமுறை தெரிவித்தும் பாஜக அதை கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.