எந்த மதத்திற்கு எதிராகவும் வன்முறையை என் அரசு ஒருபோதும் அனுமதிக்காது: மோடி
டெல்லி: எந்த மதத்திற்கு எதிராகவும் வன்முறையை கட்டவிழ்த்துவிட என் அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த பாதிரியார் குரியகோஸ் மற்றும் கன்னிகாஸ்திரி யூப்ரேசியா ஆகியோருக்கு அண்மையில் வாடிகன் நகரில் நடந்த விழாவில் புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது. இயேசு கிறிஸ்துவுக்காகவே வாழ்ந்து இறந்த அவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது டெல்லியில் உள்ள விக்யன் பவனில் நடந்த விழாவில் கொண்டாடப்பட்டது. விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
மகிழ்ச்சி
குரியகோஸ் மற்றும் யூப்ரேசியாவுக்கு புனிதர் பட்டம் அளிக்கப்பட்டதை நினைத்து நாடே பெருமைப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
மதங்கள்
அனைத்து மதங்களையும் சமமாக மதித்து நடக்கும் பழக்கம் இந்தியாவில் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. சம மரியாதை என்பது அனைத்து இந்தியர்களின் மரபணுவிலேயே உள்ளது.
மத்திய அரசு
எந்த மத அமைப்பும் அது பெரும்பான்யினருடையதோ அல்லது சிறுபான்மையினருடையதோ பிறருக்கு எதிராக வெறுப்பை ஏற்படுத்த என் அரசு ஒருநாளும் அனுமதிக்காது. எந்த மத அமைப்புக்கு எதிராகவும் வன்முறை கட்டவிழ்த்துவிடப்படுவதை ஏற்க முடியாது. அத்தகையவர்கள் மீது என் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். நான் வன்முறையை கடுமையாக கண்டிப்பவன்.
உரிமை
தங்களுக்கு பிடித்த மதத்தில் இருக்க அல்லது பிடித்த மதத்திற்கு மாற அனைவருக்கும் உரிமை உள்ளது.
பாரத மாதா
பாரத மாதா பல மதங்களுக்கு பிறப்பு கொடுத்துள்ளார். அதில் சில இந்திய எல்லையைத் தாண்டி பயணம் செய்துள்ளது என்றார் மோடி.
டெல்லி பள்ளி
தெற்கு டெல்லியில் உள்ள கிறிஸ்தவ பள்ளி தாக்கப்பட்ட உடன் மோடி டெல்லி போலீஸ் கமிஷனர் பஸ்ஸி மற்றும் உள்துறை செயலாளரை அழைத்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.