நீங்கள் ஊழலற்றவர் என்பதை சீதையைப் போல நிரூபிப்பீர்களா?: கெஜ்ரிவாலை கேட்கும் காங்கிரஸ்
மைசூர்: தான் எந்த ஊழலிலும் ஈடுபடவில்லை என்பதை சீதை போல அக்னிப் பரீட்சை செய்து நிரூபிக்கத் தயாரா என சவால் விட்டுள்ளார் காங்கிரஸ் எம்.பி விசுவநாத்.
கடந்த சில நாட்களுக்கு ஊழலில் ஈடுபட்ட தலைவர்கள் என சிலரது பெயரை வெளியிட்டு, அவர்களுக்கு போட்டியாக தங்களது கட்சி வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்துவதாக அறிவித்தார் ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால்.
கெஜ்ரிவால் வெளியிட்ட பட்டியலில் இடம் பெற்றுள்ள பல அரசியல் தலைவர்கள், தங்கள் மீது சுமத்தப் பட்டுள்ள பழியை ஆம் ஆத்மி நிரூபிக்க வேண்டும் என கெடு விதித்துள்ளனர். இதனால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.

இந்நிலையில், பிறரது ஊழல்கள் குறித்து பேசும் கெஜ்ரிவால், தான் ஊழல் செய்யாதவர் என்பதை நிரூபிக்க அக்னிப் பரீட்சையில் ஈடுபடத் தயாரா என வினா எழுப்பியுள்ளார் மைசூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி விசுவநாத்.
மைசூர் டி.நரசிப்புரா சாலையில் எம்.பி. நிதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பஸ் நிறுத்த நிழல் குடையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் விசுவநாத்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது :-
162 அரசியல்வாதிகளின் பட்டியலை வெளியிட்டு இவர்கள் எல்லோரும் ஊழலில் ஈடுபட்டு உள்ளனர், இவர்கள் மீது வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும் என்று கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் அவரே ஊழலில் ஈடுபட்டுள்ளார். இதற்காக முதலில் அவர் மீது தான் விசாரணை நடத்த வேண்டும்.
மேலும், தான் எந்த ஊழலிலும் ஈடுபடவில்லை என்று கூறும் கெஜ்ரிவால், இதை நிரூபிக்க சீதை போல அக்னி பரீட்சையில் ஈடுபட தயாரா? அவரால் இது முடியுமா? அனைத்து கட்சி பிரமுகர்கள் மீதும் ஊழல் புகார் கூறுவது, ஒரு முதல்வருக்கு தகுதி அல்ல' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications