சோனியா, ராகுல் மாதிரி நானும், என் மகனும் கட்சியை நடத்துவோம்: ராப்ரி தேவி
பாட்னா: சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் காங்கிரஸை வழிநடத்துவது போன்று தானும், தனது மகனும் ராஷ்ட்ரிய ஜனதாதளத்தை நடத்தப்போவதாக ராப்ரி தேவி தெரிவித்துள்ளார்.
ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் நேற்று சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து கட்சியை அவரது மனைவி ராப்ரி தேவி வழிநடத்துவார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ராம்க்ரிபால் யாதவ் தெரிவித்தார்.
இந்நிலையில் இது குறித்து ராப்ரி தேவி கூறுகையில்,
அவர் கட்சியை உருவாக்கி, வளர்த்துவிட்டார். அவர் சிறையில் இருக்கும்போது நானும் என் மகனும் கட்சியை வழிநடத்துவோம். எப்படி சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் அவர்களின் மூதாதையர்கள் உருவாக்கிய காங்கிரஸை வழிநடுத்துகிறார்களோ அதே போன்று நாங்களும் எங்கள் கட்சியை பலப்படுத்துவோம் என்றார்.
ராப்ரி தேவிக்கு தேஜ் பிரதாப் மற்றும் தேஜஸ்வி யாதவ் என்று 2 மகன்கள் உள்ளனர். ராப்ரி தேவி கடந்த 1997ம் ஆண்டு தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் சிபிஐ நீதிமன்றத்தில் சரண் அடைந்தபோது பீகாரின் முதல்வர் ஆக்கப்பட்டார். அதன் பிறகு 2000ம் ஆண்டு மீண்டும் முதல்வர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.