மத்திய பிரதேச சட்டசபை தேர்தல்.. காங்கிரஸ் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது தெரியுமா?
போபால்: 15 வருடங்களாக தொடர்ந்து ஒரே முதல்வர் தலைமையில் ஆட்சி.. எனவே இம்முறை தேர்தல் நடைபெறும்போது அந்த ஆட்சிக்கு எதிராக மக்கள் வாக்களிப்பார்கள்.. என்பது தான் பொதுவான ஒரு கருத்தாக இருக்க முடியும். ஆனால் இவ்வாண்டு இறுதிக்குள் தேர்தலை சந்திக்கவுள்ள மத்திய பிரதேசத்தில் நிலைமை அப்படித்தான் உள்ளதா?
ஆளும் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிக்கு எதிராக மக்கள் வாக்களிப்பார்களா? அல்லது தொடர்ச்சியாக 20 ஆண்டுகள் ஆட்சி நடத்துவதற்கு மீண்டும் பாஜகவுக்கு வாய்ப்பு வழங்குவார்களா என்ற கேள்விக்கு அங்குள்ள களநிலவரம் கூறும் விடை இதுதான்.
மத்திய பிரதேசத்தில் 13 மாவட்டங்களில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில் 14 நகராட்சிகளில் 9 நகராட்சிகளை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. முன்காலி, மற்றும் கோளாராஸ் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு இவ்வாண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. ஏற்கனவே கடந்த வருடம் கஜுராஹோ தொகுதி இடைத் தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

காங்கிரசின் வலிமை எப்படி?
மத்திய பிரதேசத்தில், விவசாயிகள் உள்ளிட்ட ஒரு குறிப்பிட்ட பிரிவினர், ஆட்சியின் மீது அதிருப்தியில் இருப்பது உண்மைதான். ஆனால் பாஜகவை தோற்கடிக்கும் அளவிற்கு இது காங்கிரசுக்கு வலுவை கொடுக்குமா என்பது சந்தேகம். பாரதிய ஜனதா கட்சி இப்போது உள்ள ஆதரவில் ஒரு கணிசமான பங்கை இழக்கும் என்று பல சர்வேக்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதை காங்கிரஸ் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமா என்பதில்தான் கேள்வி தொக்கி நிற்கிறது.

முதல்வர் வேட்பாளர் சிக்கல்
வியாபம் போன்ற மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டுக்கு பிறகும், சிவராஜ் சிங் சவுகான் மக்கள் மத்தியில் வலுவான தலைவராக உள்ளார். அவரை தான் பாரதிய ஜனதா கட்சி இந்த முறையும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க உள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சியில் அவரை எதிர்த்து நிற்கும் அளவுக்கு பிரபலமாக காணப்படும் முதல்வர் பதவிக்கான முகம் கிடையாது. வியாபம் விவகாரம் மீடியாக்களில் எவ்வளவு பெரிதாக வெளியான போதிலும், அதை தங்களின் தேர்தல் ஆதாயத்திற்காக பயன்படுத்திக் கொள்வதில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. சாமானிய மக்களுக்கு அந்த ஊழல் குறித்த விழிப்புணர்வை காங்கிரஸ் ஏற்படுத்தவில்லை.

பல கோஷ்டிகள்
காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள் இடையே ஒற்றுமை கிடையாது. பல்வேறு கோஷ்டிகள் உள்ளன. இரு கட்சிகளின் மாநில மற்றும் தேசிய தலைமையை ஒப்பிட்டுப் பார்த்து வாக்காளர்கள் வாக்களிக்கும் போது, அதில் பாரதிய ஜனதா கட்சிக்கு தான் அதிக லாபம் கிடைக்கும்.
கேரளாவைப் போலவோ, கர்நாடகாவை போலவோ, மாநிலத்தில் பிரபலமான ஒரு முகத்தை மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் வளர்க்கவில்லை.

வாக்கு சதவீதம்
2003ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மொத்தமுள்ள 230 தொகுதிகளில், 173 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 42.5 சதவீதம் வாக்குகள் பெற்றது. 1993 முதல் 2003 வரை தொடர்ந்து 10 ஆண்டுகாலம் மத்திய பிரதேசத்தை ஆண்ட காங்கிரஸ் கட்சி வெறும் 36 தொகுதிகளில் மட்டுமே அப்போது வெல்ல முடிந்தது 31.6 சதவீதம் வாக்குகளே அதை பெற்றது.

பாஜக வாக்கு சதவீதம்
2008ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின்போது பாரதிய ஜனதா கட்சியின் வாக்கு சதவீதம் என்பது 42.5 என்பதிலிருந்து 37.6 என்ற அளவுக்கு சரிவை சந்தித்தது. ஆனால் 143 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 71 தொகுதிகளை வென்றது. 2013ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பிஜேபி ஹாட்ரிக் வெற்றியை பெற்றது. அந்த தேர்தலில் 165 தொகுதிகளை வென்றதோடு, பிஜேபி தனது வாக்கு வங்கியை 44.9 சதவீதமாக உயர்த்தி விட்டது.

பாஜகவிற்கு ஆதாயம்
காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியில் கடந்த 15 வருடங்களாக பகுஜன் சமாஜ் கட்சி பெரும் ஓட்டையைப் போட்டு வருகிறது. 2003ஆம் ஆண்டில் பகுஜன் சமாஜ் கட்சி 7.3% வாக்குகளையும் 2008ஆம் ஆண்டு 9 சதவீத வாக்குகளையும் 2013ஆம் ஆண்டு 6.3 சதவீத வாக்குகளையும பெற்றது. பகுஜன் சமாஜ் கட்சியின் இந்த வாக்குகள் காங்கிரசுக்கு செல்ல வேண்டியவை என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

கூட்டணியே தீர்வு
மால்வா, மகாகவுசல், சம்பல் மற்றும் விந்திய பிரதேசம் ஆகிய பகுதிகளில் காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் தங்களுக்குள் வாக்குகளை சிதறடித்து கொள்வது பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் பலமாக உள்ளது. இப்போதுள்ள சூழ்நிலையை வைத்து பார்க்கும் போது கூட, வரும் தேர்தலில் பாஜகவை தனித்து தோற்கடிக்கும் வலிமை காங்கிரசுக்கு இல்லை என்று தெரிகிறது. அங்கு மும்முனைப் போட்டி நிலவும் வரை, பாரதிய ஜனதா கட்சிக்குதான் ஆதாயமாக இருக்கும். பகுஜன் சமாஜ் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துக் கொள்வது மட்டுமே பாரதிய ஜனதா கட்சி வலுவோடு இருப்பதற்கு உதவும். பாரதிய ஜனதா ஆட்சிக்கு எதிராக உள்ள அலையும், காங்கிரஸ் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணியும் பாஜகவுக்கு தேர்தலில் கடும் நெருக்கடியை தரலாம். அதை வரும் நாட்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்












Click it and Unblock the Notifications