காவிரி வழக்கு: தமிழகம், கர்நாடகா அரசுகள் கோருவது என்ன? உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கும்?
காவிரி நதிநீர் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று இறுதித் தீர்ப்பை வழங்க உள்ளது.
டெல்லி: காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழகம், கர்நாடகா, புதுவை, கேரளா மாநிலங்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்படுகிறது.
2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியது. அந்த இறுதித் தீர்ப்பில், தமிழகத்துக்கு 419 டி.எம்.சி. நீரும் கர்நாடகாவுக்கு 270 டி.எம்.சி. நீரும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதாவது தமிழகத்தின் உரிமையான டி.எம்.சி.யில் 227 டி.எம்.சி. நீர் தமிழக எல்லைக்குள் ஓடும் காவிரியின் கிளை நதிகளான நொய்யல், பவானி, கொள்ளிடம் ஆகியவற்றிலிருந்து காவிரியில் கலந்துவிடும்.

எஞ்சிய 192 டி.எம்.சி. நீரைத் தான் கர்நாடகம் தமிழகத்திற்கு தரவேண்டும். கேரளாவுக்கு 30 டி.எம்.சி. நீரும் புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி. நீரும் வழங்கவும் காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பளித்தது.
ஆனால் காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பில் தமிழகத்துக்கு 205 டி.எம்.சி. நீர் ஒதுக்கப்பட்டிருந்தது. இதனால் இறுதித் தீர்ப்பை எதிர்த்து தமிழகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதில் தமிழகத்துக்கு 192 டி.எம்.சி. நீர் போதாது; 260 டி.எம்.சி. நீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
அதேநேரத்தில் கர்நாடகாவோ தமிழகத்துக்கு 192 டி.எம்.சி. நீரும் தரக்கூடாது; 60 டி.எம்.சி.நீரை குறைத்து (132 டி.எம்.சி.) வழங்க உத்தரவிடக் கோரி மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. இவைதான் இன்று தீர்ப்பளிக்கப்பட இருக்கும் காவிரி வழக்கின் முக்கிய அம்சங்கள்.
இது தொடர்பாக கடந்த 10 ஆண்டுகள் வாதங்கள் நடைபெற்றன. இதனால் உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கும் என்பது தமிழகம், கர்நாடகா விவசாயிகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
உச்சநீதிமன்றமானது
- 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அப்படியே ஏற்க உத்தரவிடலாம்
- காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடலாம்
- இறுதித் தீர்ப்பில் சில மாற்றங்களை செய்து தீர்ப்பு வழங்கலாம்
- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கெடு விதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications