நான் ஒரு வங்கத்து புலி.. உங்களை வெல்ல ஒற்றை கால் போதும்... அடுத்த குறி டெல்லிதான்.. மம்தா ஆக்ரோஷம்
கொல்கத்தா: தன்னை ஒரு வங்கத்துப் புலி என்று குறிப்பிட்ட மம்தா, சட்டசபை தேர்தலில் ஒற்ற காலுடன் வெல்வேன் என்றும் வரும் காலங்களில் டெல்லியை நோக்கி வீறு நடை போடுவேன் என்றும் பிரசார கூட்டத்தில் பேசியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை 60 தொகுதிகளில் இரண்டு கட்டமாகத் தேர்தல் முடிந்துள்ளது.
தமிழ்நாடு, புதுவை, கேரளா ஆகிய மாநிலங்களுடன் மேற்கு வங்கத்தில் மூன்றாம் கட்ட தேர்தலும் நாளை நடைபெறுகிறது. அங்கு 31 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.
அந்நியர்கள் தேவையில்லை
இந்நிலையில், பிரசார கூட்டத்தில் பேசிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, மேற்கு வங்கத்தை மண்ணின் மைந்தரே ஆள வேண்டும் என்றும் அந்நியர்களுக்கு இங்கு இடமில்லை என்றும் குறிப்பிட்டார். பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை மேற்கு வங்க முதல்வர் மம்தா, தொடர்ந்து அந்நியர்கள் என்று விமர்சித்து வருகிறார்.
ஒற்றைக் கால் போதும்
குஜராத்தில் இருப்பவர்கள் யாரும் மாநிலத்தை ஆள தேவையில்லை என்று கூறிய மம்தா, தன்னை வங்கத்துப் புலி என்றும் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், மேற்கு வங்க தேர்தலை ஒற்றைக் காலுடன் வெல்வேன். வரும் காலங்களில் தலைநகர் டெல்லியை நோக்கி இரண்டு கால்களில் வீறு நடை போடுவேன் என்றும் அவர் தெரிவித்தார். கடந்த மாதம் நந்திகாரம் தொகுதியில் பிரசாரம் செய்த போது மம்தா காலில் காயம் ஏற்பட்டது.போதும்
மாவோயிஸ்ட் தாக்குதல்
மாவோயிஸ்ட்கள் பாதுகாப்புப் படையினர் மீது நடத்திய தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்த அவர், பாஜக தலைவர்கள் மேற்கு வங்க தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதால் நாட்டை முறையாகப் பார்த்துக் கொள்ளத் தவறிவிட்டனர் என்றும் குற்றஞ்சாட்டினார். மேலும், தேர்தலில் வெல்ல வெளியாட்களை மேற்கு வங்கத்திற்கு பாஜக அழைத்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்,
அதிக நாட்கள்
பாஜகவின் திட்டத்தின் அடிப்படையிலேயே மேற்கு வங்கத்தில் தேர்தல் எட்டு கட்டங்களாக நடத்தப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். கொரோனா பரவல் அதிகரித்து வரும் இந்தச் சூழ்நிலையில், விரைவாகத் தேர்தலை நடத்துவதற்குப் பதில் அதிக நாட்களில் நடத்துவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். பாஜகவுக்கு மேற்கு வங்கத்தில் செல்வாக்கு இல்லை என்றும் தேர்தலில் போட்டியிட திரிணாமுல் மற்றும் இடதுசாரி கட்சியைச் சேர்ந்தவர்களைக் காசு கொடுத்து பாஜக வாங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.