பெட்ஷீட்டுகளை கயிறாக்கி... உ.பி. சீர்திருத்த மையத்திலிருந்து தப்பி ஓடிய 91 சிறார்கள்!
லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் படுக்கை விரிப்புகளை சேர்த்து கயிறாக்கி, சீர்திருத்த மையத்திலிருந்து 91 சிறுவர்கள் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள சிறார் சீர்திருத்த மையத்தில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சுமார் மூன்று அடுக்குகளைக் கொண்ட இந்த சிறார் சீர்திருத்த மையத்தில், அறை ஒன்றின் ஜன்னல்களில் இருந்த இரும்பு கம்பிகளை நீக்கி, 90க்கும் அதிகமான சிறுவர்கள் தப்பி ஓடியுள்ளனர். கட்டிடத்தில் இருந்து கீழே இறங்கித் தப்பிக்க அவர்கள் படுக்கை விரிப்புகளை ஒன்றாக இணைத்து கயிறாக பயன்படுத்தியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மூன்றடுக்கு மாளிகையான இந்த மையத்தில் இருந்து தப்புவதற்கு அவர்கள் படுக்கை விரிப்புகளைக் கயிறாகப் பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

தப்பி ஓடிய 91 சிறுவர்களில், அவர்களில் 35 பேரை திரும்ப பிடித்துவிட்டதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர். தப்பிய அனைவருமே 18 வயதுக்குக் கீழானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரி ஓம் பிரகாஷ் கூறும்போது, "காவலர்கள் சிறையின் முன்பு காவல் காத்திருந்தார்கள். அப்போது சிறுவர்கள் கட்டிடத்தின் பின்பக்கம் உள்ள ஜன்னல் கம்பிகளை நீக்கி, படுக்கை விரிப்புகளைக் கயிறாகப் பயன்படுத்தி தப்பித்துள்ளனர். இவர்கள் அனைவரும் திருட்டு மற்றும் வழிப்பறி ஆகிய வழக்குகளில் சிக்கியவர்கள்" என்றார்.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் இதே சிறுவர் சீர்திருத்த மையத்தில் தான் சிறுவர்கள் சேர்ந்து போலீஸ்காரர் ஒருவரை அடித்துக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications