ஒடிசா விபத்து வடு கூட ஆறல.. அதற்குள் பீகாரில் அடுத்த விபத்து! நள்ளிரவில் தடம் புரண்ட ரயில்! திக்திக்
பாட்னா: ஒடிசா மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் நடந்த கொடூர விபத்தின் வடு ஆறும் முன்பு, இப்போது பீகாரில் மற்றொரு விபத்து நடந்துள்ளது. இதுபோல தொடரும் ரயில் விபத்துகள் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
உலகிலேயே மிகப் பெரிய ரயில் நெட்வோர்க்கை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. நமது நாட்டில் எந்தவொரு பகுதிக்கும் மிக எளிதாக ரயில் மூலம் சென்று வர முடியும். அந்தளவுக்கு விரிவான கட்டமைப்பை இந்திய ரயில்வே கொண்டுள்ளது.

கட்டணம், எளிமையான பயணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பொதுமக்கள் ரயில்கள் மூலமாகவே பயணிக்க விரும்புகின்றனர். இருப்பினும், நமது நாட்டில் ரயில் விபத்துகள் தொடர்கதையாகவே இருக்கிறது.
ஒடிசா ரயில் விபத்து: ஒடிசாவின் பாலசோரில் கடந்த ஜூன் மாதம் நடந்த விபத்தை யாராலும் மறக்க முடியாது. சமீப காலங்களில் நடந்த விபத்துகளிலேயே மிக மோசமான விபத்தாக இது கருதப்பட்டது. இந்த விபத்தில் 296 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 1200க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்துள்ளனர். ஜூன் 2ஆம் தேதி நடந்த இந்த ரயில் விபத்தில் நாடு முழுக்க இருக்கும் பலரும் தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்தனர்.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட இரண்டு பயணிகள் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் மோதி இந்த விபத்து ஏற்பட்ட நிலையில், இது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அன்றைய தினம் ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மெயின் டிராக்கை விட்டு, லூப் டிராக்கில் சென்றுள்ளது. அங்கே லூப் டிராக்கில் சரக்கு ரயில் இருந்த நிலையில், அதன் மீது மோதி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது.
மிக மோசமான பாதிப்பு: கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் அருகே இருந்த தண்டவாளத்தில் விழுந்த நிலையில், அதில் பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலும் மோதியது. இரண்டு ரயில் பெட்டிகள், ஒரு சரக்கு ரயில் அடுத்தடுத்து மோதியதில் இந்த மோசமான விபத்து ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் விடிய விடிய நடைபெற்ற நிலையில், அதை முழுமையாக முடிக்கவே சில நாட்கள் வரை ஆனது. அந்தளவுக்குப் பாதிப்புகள் மோசமாக இருந்தது.
இந்த ரயில் விபத்திற்கு முதலில் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டது. இருப்பினும், சிக்னல் வழங்கியதில் ஏற்பட்ட குளறுபடியே விபத்திற்குக் காரணம் என்று பலரும் கூறுகின்றனர். அது தொடர்பாக ஏற்கனவே சிலரைக் கைதும் செய்தனர். சமீப காலங்களில் இந்தியாவில் நடந்த மிக மோசமான விபத்தாக இது இருந்தது. அந்த விபத்தில் உயிரிழந்தோரின் உடல்களை மருத்துவமனைக்கு எடுத்த செல்ல முடியாத நிலையில், அவை அங்குள்ள பள்ளியில் வைக்கப்பட்டது. அந்தளவுக்கு விபத்து மிக மோசமானதாக இருந்துள்ளது.
மற்றொரு விபத்து: இந்த கொடூர விபத்தே இன்னும் இந்தியர்கள் மனதை விட்டு அகலவில்லை. ஆனால், அதற்குள் இப்போது மற்றொரு மோசமான விபத்து அரங்கேறியுள்ளது. இந்த முறை பீகாரில் இந்த விபத்து நடந்துள்ளது. பீகார் மாநிலத்தில் பக்சர் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூர் ரயில் நிலையத்தில் வடகிழக்கு அதிவிரைவு ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. ஆனந்த் விஹாரில் இருந்து காமாக்யா செல்லும் ரயில் தடம் புரண்டது.
நேற்று இரவு ஏற்பட்ட இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக 97714 49971, 89056 97493, 83061 80542, 77590 70004 ஆகிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விபத்து தகவல் கிடைத்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பேரிடர் படையினர், மீட்புப் பணிகளைத் துரிதமாக மேற்கொண்டனர். இதையடுத்து அதிகாலையில் மீட்புப் பணிகள் நிறைவடைந்தது. இந்த விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
ஒடிசா மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் நடந்த கொடூர விபத்தின் வடு ஆறும் முன்பு, பீகாரில் இந்த மோசமான விபத்து நடந்துள்ளது. இப்படித் தொடரும் ரயில் விபத்துகள் ரயிலில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. இதுபோன்ற ரயில் விபத்துகளைத் தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications