58 வயது தாத்தாவின் 20 வயது மனைவி மாயம்- நகைகளுடன் தலைமறைவானதாக புகார்
தானே: மும்பையில் 58 வயதானவரை மணந்து கொண்ட 20 வயது பெண்ணொருவர் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. அதுகுறித்து அவரது கணவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
தானே நவ்பாடா பகுதியை சேர்ந்தவர் சதிஷ் ஆப்தே. இவர் கடந்த ஜனவரி 1, புத்தாண்டு தினத்தன்று அம்ருதா என்ற 20 வயது இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தை கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
இந்த நிலையில் அம்ருதா திடீரென மாயமாகி விட்டார். அவர் கடந்த மார்ச் 31 ஆம் தேதி முதல் காணாமல் போய் விட்டதாக சதிஷ் ஆப்தே நவ்பாடா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் அவர் தனது வீட்டில் இருந்த குடும்ப நகைகளை திருடி கொண்டு அம்ருதா தலைமறைவாகி விட்டதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அம்ருதாவின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டனர். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அம்ருதாவின் பெற்றோர் வசாயில் வசித்து வருகின்றனர். அவர்களையும் காணவில்லை என்று கூறப்படுகிறது.
அம்ருதா காணாமல் போனது தொடர்பாக அவர் மூன்று மாதங்களுக்கு பிறகு போலீசில் புகார் கொடுத்திருப்பதால் போலீசாருக்கு சதிஷ் ஆப்தே மீதும் சந்தேகம் எழுந்துள்ளது. போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையின் போது கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அது முதல் அம்ருதாவை காணவில்லை என்றும் தெரிவித்தார்.
போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அம்ருதாவை கண்டுபிடிக்கும் நடவடிக்கையிலும் இறங்கி உள்ளனர். 58 வயதுக்காரரை மணந்த மூன்றே மாதத்தில் இளம்பெண் மாயமானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.