நான் இந்திராவின் பேத்தி... சஞ்சய் காந்தியின் மகள்... டெல்லியில் பரபரப்பை கிளப்பிய பெண்
தாம் இந்திராவின் பேத்தி என்றும் சஞ்சய் காந்தியின் மகள் எனவும் டெல்லியில் 48 வயது பெண் பரபரப்பை கிளப்பியுள்ளார்.
டெல்லி: தாம் இந்திரா காந்தியின் பேத்தி; சஞ்சய் காந்தியின் மகள் என டெல்லியில் பரபரப்பை கிளப்பியிருக்கிறார் 48 வயது பெண் பிரியா சிங் பால்.
இந்திரா காந்தியின் இளைய மகனான சஞ்சய் காந்திதான் நாட்டின் கருப்பு அத்தியாயமான அவசர நிலை பிரகடனத்துக்கு காரணமாக இருந்தவர். அவசர நிலை காலத்தில் சஞ்சய் காந்தியின் ஆட்டங்களால் தேசம் அதிர்ந்தது.

சஞ்சய் காந்தி
1980-ம் ஆண்டு சஞ்சய் காந்தி விமான விபத்தில் இறந்து போனார். சஞ்சய் காந்தியின் மனைவி மேனகா காந்தி, மகன் வருண் காந்தி ஆகியோர் பாஜகவில் உள்ளனர். மேனகா காந்தி, மத்திய அமைச்சராகவும் இருக்கிறார்.

இந்து சர்க்கார்
அவசரநிலை காலம் தொடர்பாக இந்து சர்க்கார் என்ற திரைப்படத்தை மதுர் பண்டார்கர் இயக்கியுள்ளார். இப்படம் வரும் 28-ந் தேதி வெளியாகிறது.

பிரியாசிங் பால்
இந்நிலையில் இந்து சர்க்கார் படத்தில் என் தந்தை சஞ்சய் காந்தியை பற்றி தவறாக சித்தரித்துள்ளதாக 48 வயதாக பிரியா சிங் பால் என்பவர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பரபரப்பை கிளப்பியுள்ளார். தாம் குழந்தையாக இருந்த போதே தத்து கொடுக்கப்பட்டுவிட்டதாகவும் பின்னாளில்தான் சஞ்சய் காந்தி மகள் என தெரியவந்தது எனவும் பிரியா சிங் பால் கூறியுள்ளார்.

டிஎன்ஏ பரிசோதனைக்கும் தயார்
அத்துடன் தந்தை சஞ்சய் காந்தியை பற்றி இழிவாக இந்து சர்க்கார் படம் சித்தரித்துள்ளதால் இத்தனை ஆண்டுகாலமாக மறைத்த உண்மையை உடைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்கிறார் பிரியா சிங் பால். மேலும் தாம் டிஎன்ஏ பரிசோதனைக்கும் கூட தயார் எனவும் சவால் விடுத்திருக்கிறார் பிரியா சிங் பால்.












Click it and Unblock the Notifications