போகி கொண்டாட்டத்தில் தள்ளுமுள்ளு... நெருப்பில் தவறி விழுந்த பெண் பரிதாப பலி
ஹைதராபாத்: ஆந்திராவில் போகிப் பண்டிகையின் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பெண் ஒருவர் நெருப்பில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆந்திரா, தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. பொங்கலுக்கு முதல் நாளான போகிப் பண்டிகையின் போது நெல்லூர் மாவட்டம், தடா கண்டிகை கிராமத்தில் பெண்கள் சிலர் ஒன்றுகூடி விறகுகளை அடுக்கி தீயிட்டு பண்டிகையை கொண்டாடினர். அப்போது இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அப்போது முனியம்மா (53) என்ற பெண் எதிர்பாராத விதமாக நெருப்பில் விழுந்தார். இதில், முனியம்மாவின் உடல் முழுவதும் தீக்காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக சிகிச்சைக்காக தடா அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார் முனியம்மா. ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தடா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போகி பண்டிகை கொண்டாட்டத்தின் போது பெண் ஒருவர் நெருப்பில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.