பெங்களூரில் பள்ளி மதிய உணவின் தரம் குறித்து புகார் கொடுத்த பெண் டாக்டர் பலர் முன்பு மானபங்கம்
பெங்களூர்: பெங்களூர் புறநகர் பகுதியில் பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவின் தரம் சரியில்லை என்று புகார் தெரிவித்த பெண் டாக்டர் பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்டோர் முன்பு வைத்து ஆடைகளை கிழித்தெறிந்து மானபங்கப்படுத்தப்பட்டுள்ளார்.

ஐ.டி. நகரமான பெங்களூர் இந்தியாவின் பாதுகாப்பான நகரங்களில் ஒன்று என்று கூறப்படுகிறது. ஆனால் அங்கு நடக்கும் சம்பவங்களை பார்த்தால் அப்படி பாதுகாப்பான நகரமாக இருப்பதாக தெரியவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை இரவு 22 வயது பெண் ஓடும் காரில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவரின் மகனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூர் புறநகர் பகுதியில் உள்ள அரசு சுகாதார மையத்தில் பணிபுரியும் பெண் டாக்டர் ஒருவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவின் தரம் சரியில்லை என்று புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த பஞ்சாயத்து ஆட்கள் டாக்டரிடம் கேட்க அவர் தான் புகார் கொடுக்கவில்லை என்று மறுத்துவிட்டார்.
இந்நிலையில் கடந்த 7ம் தேதி 100 பேர் கொண்ட கும்பல் அரசு சுகாதார மையத்திற்குள் புகுந்து அந்த டாக்டரை வெளியே இழுந்து வந்தது. பின்னர் பஞ்சாயத்து தலைவர் முன்னிலையில் டாக்டரின் ஆடைகளை அவிழ்த்து அவரை மானபங்கப்படுத்தினர்.
இது குறித்து அந்த டாக்டர் நீலமங்களா போலீசாரிடம் புகார் கொடுத்தார். ஆனால் போலீசார் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications