உ.பி.யில் ஓடும் காரில் இளம்பெண் 4 பேரால் பாலியல் பலாத்காரம்
காசியாபாத்: உத்தர பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் ஓடும் காரில் 4 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் வழக்கறிஞர் ஒருவரை சந்திக்க காசியாபாத் நீதிமன்றத்திற்கு நேற்று சென்றார். அப்பெண் விவாகரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் வழக்கறிஞரை சந்தித்து பேசிவிட்டு பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு தெரிந்த நபர் ஒருவர் அங்கு வந்துள்ளார். அவரை அப்பெண் அங்கிள் என்று அழைத்துள்ளார்.
அவரிடம் அப்பெண் தனக்கு ஒரு வேலை வேண்டும் என்று தெரிவித்துள்ளார். உடனே அந்த நபர் தான் வேலை வாங்கித் தருவதாகவும், தன்னுடன் காரில் லோனி பகுதிக்கு வருமாறும் கூறியுள்ளார்.
அப்பெண்ணும் காரில் சென்றுள்ளார். லோனி பகுதியில் 3 பேர் காரில் ஏறியுள்ளனர். அதன் பிறகு அந்த 4 பேரும் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த கொடுமை சுமார் ஒரு மணிநேரமாக நடந்துள்ளது. அதன் பிறகு அவர்கள் அப்பெண்ணை கோவிந்தாபுரம் பகுதியில் காரில் இருந்து தள்ளிவிட்டு சென்றுவிட்டனர்.
இதையடுத்து அப்பெண் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த 4 பேரையும் தேடி வருகின்றனர்.