எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி மீண்டும் பாக். தாக்குதல் - பெண் பலி - 3 பேர் காயம்!
ஜம்மு: ஜம்மு - காஷ்மீரில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் வகையில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று நடத்திய தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மூவர் காயமடைந்தனர்.
ஜம்முவில் முன்னாள் மாநில நிதியமைச்சர் கிரிதாரி லால் டோக்ராவின் நூற்றாண்டு விழா நாளை கொண்டாடப் படுகிறது. இதில், பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
இந்நிலையில், ஜம்மு வின், அக்னூர் பகுதியில் போர் நிறுத்தத்தை மீறும் வகையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர்.

இதில், எல்லைப் பகுதியில் பாதுகாவல் பணியில் ஈடுபட்டிருந்த வீரர் ஒருவர் காயமடைந்தார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மற்ற வீரர்கள் முயன்றனர். அப்போது மீண்டும் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இந்திய வீரர்களும் அவர்களுக்கு தக்க பதிலடி தந்தனர். இதற்கிடையில், காயமடைந்த வீரர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதேபோல், எல்லை பகுதிகளில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலும், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சிறுவகை பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தினர். இதில் பாலி தேவி (42) என்ற பெண் உயிரிழந்தார். மேலும் இருவர் காயமடைந்தனர்.
இந்த மாதத்தில், ஏழாவது முறையாக, போர் நிறுத்தத்தை மீறும் வகையில், பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி நாளை (வெள்ளிக்கிழமை) காஷ்மீருக்கு செல்ல உள்ள நிலையில், அங்கு நடத்தப்பட்ட இந்த தாக்குதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் எல்லை பகுதியின் பாதுகாப்பு நிலை குறித்து அறிய இந்திய ராணுவ துணை தளபதி பிலிப் கம்போஸ் காஷ்மீருக்கு சென்றார். அங்கு அதிகாரிகளை சந்தித்து பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி அவர் ஆலோசித்ததாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி சுட்டுக் கொலை :
இதேபோல், ஜம்மு - காஷ்மீரில் நேற்று, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
இது தொடர்பாக ஸ்ரீநகரில் நேற்று போலீஸ் உயரதிகாரி செய்தியாளர்கள் மத்தியில் கூறியதாவது:-
தெற்கு காஷ்மீரில் குல்காம் மாவட்டத்தில், ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி பஷீர் அகமது தர், பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்துக்கு எந்த பயங்கரவாத இயக்கமும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. கொலைக்கு காரணமானவர்களை பிடிக்க, போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்' என்றார்.
இரு நாட்களுக்கு முன், சோபியன் மாவட்டத்தில், கிராமத் தலைவரை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்று விட்டு தப்பியோடினர். இந்நிலையில், மேலும் ஒருவர் கொல்லப்பட்டது, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications