கணவரின் சிகிச்சைக்காக புதிதாக பிறந்த குழந்தையை விற்ற தாய்... உ.பி.யில் கொடூரம்
உத்தரப்பிரதேசத்தில் கணவரின் சிகிச்சைக்காக புதிதாக பிறந்த குழந்தையை பெண் ஒருவர் விற்றுள்ளார்.
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் கணவரின் சிகிச்சைக்கு பணமில்லாததால் பிறந்து சில நாட்களே ஆன குழந்தையை அதன் தாயே விற்பனை செய்த கொடூரம் நடந்துள்ளது.
பரேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹர்ஸ்வரூப் மௌர்யா. இவரது மனைவி சஞ்சு தேவி. இவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கட்டட பணியில் கூலி தொழிலாளியாக பணி புரிந்த மௌர்யா மீது கடந்த 3 மாதங்களுக்கு சுவர் ஒன்றுவிழுந்தது.

இதில் பலத்த காயமடைந்த அவருக்கு சிகிச்சை அளிக்க பணமில்லாமல் சஞ்சு தேவி அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் அவரது குடும்பத்தில் வருமானத்தை ஈட்டும் மௌர்யா பணிக்கு செல்ல முடியாததால் அந்த குடும்பம் வறுமையில் வாடியது.
கணவரின் சிகிச்சைக்கு பணத்தேவைக்காக ரூ.42 ஆயிரத்துக்கு அண்மையில் பிறந்த குழந்தையை விற்றுள்ளார் சஞ்சு தேவி. இந்த விவகாரம் உள்ளூர் தொலைகாட்சி சேனல் மூலம் கடந்த திங்கள்கிழமை வெளியே வந்தது.
இதையடுத்து மௌர்யாவுக்கு சிகிச்சை அளிக்கவும், அவரது குழந்தையை விற்பனைக்காக பெற்றுக் கொண்ட தம்பதியை தேடும் பணியும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் விரைவில் குழந்தையை மீட்டு சஞ்சு தேவியிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications