பிரிட்டனிலிருந்து திரும்பிய பெண்ணுக்கு கொரோனா... அதிகாரிகளிடம் இருந்து தப்பி ரயிலில் ஆந்திர பயணம்
அமராவதி: பிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பிய பெண் கொரோனா நோயாளி, அதிகாரிகளிடம் இருந்து தப்பி ரயில் மூலம் ஆந்திரா சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 24,236 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது வரை நாடு முழுவதும் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.01 கோடியாக அதிகரித்துள்ளது. அவர்களில் 1.46 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

பிரிட்டனில் பரவும் புதிய வகை கொரோனா
பிரிட்டன் நாட்டில் தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் மற்ற வகைகளைவிட 70% வேகமாகப் பரவுவதாகப் பிரிட்டன் சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக இந்தியா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நாடுகள் பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்குத் தடை விதித்துள்ளன.

ஆந்திர பெண்ணுக்கு கொரோனா
இந்நிலையில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த டிசம்பர் 21ஆம் தேதி பிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பியுள்ளார். பிரிட்டனில் ஆசிரியராக பணியாற்றி வரும் அவரிடம் டெல்லி விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ரயில் பயணம்
அங்கு அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அங்கிருந்த அதிகாரிகளிடம் இருந்து தப்பிய அவர், தனது மகனுடன் ஆந்திர எக்ஸ்பிரஸ் மூலம் அமராவதி வந்தடைந்துள்ளார். அமராவதியிலிருந்து அதிகாரிகளிடம், தன்னை வீட்டு தனிமையில் இருக்கவே டெல்லியில் சுகாதாரத் துறையினர் பரிந்துரைத்ததாகக் கூறிவிட்டு, தனது சொந்த ஊரான ராஜமஹேந்திரவரத்திற்கு சென்றுள்ளார்.

சொந்த ஊரில் மடக்கிப் பிடித்த அதிகாரிகள்
ஆனால், அதற்குள் இந்தப் பெண் குறித்த தகவல்களை டெல்லி அதிகாரிகள் அளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து புதன்கிழமை நள்ளிரவு ராஜமஹேந்திரவரத்திற்கு வந்த அந்தப் பெண்ணையும் அவரது மகனையும் அங்கிருந்த சுகாதாரத் துறை அலுவலர்கள் தனிமைப்படுத்தினர். அந்தப் பெண் மீது இதுவரை எவ்வித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏசி முதல் வகுப்பில் பயணம்
விசாரணையில் அந்தப் பெண் தனது மகனுடன் ஆந்திரப் பிரதேச எக்ஸ்பிரஸில் ஏசி முதல் வகுப்பில் பயணித்தது தெரியவந்தது. ஏசி வகுப்பில் அவருடன் பயணித்த மற்ற பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுமா என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. மேலும், அப்பெண்ணின் பெயர் உள்ளிட்ட மற்ற தகவல்களை வெளியிட அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

புதிய வகை கொரோனாவா?
பிரிட்டனில் புதிய வகை கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், இப்பெண்ணின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அப்பெண்ணிடம் இருந்தும் அவரது மகனிடம் இருந்தும் உமிழ்நீர் மாதிரிகள் சேமிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு இருப்பது புதிய வகை கொரோனாவா என்பது குறித்து ஆய்வு செய்ய உமிழ்நீர் மாதிரிகள் புனேவிலுள்ள தேசிய வைராலஜி மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications