மும்பையில் ரயில் முன் பாய்ந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்!
மும்பையில் தற்கொலை செய்வதற்காக ரயில் முன் பாய்ந்த பெண் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை: தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் ரயில் முன் பாய்ந்த மும்பை பெண் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மத்திய ரயில்வேயின் முக்கிய வழித்தடத்தில் காட்கோபர் ரயில் நிலையம் உள்ளது. இங்கு கல்யாண் நோக்கி செல்லும் மின்சார ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது.
அப்போது ஒன்றாம் நடைமேடையில் நின்று கொண்டிருந்த பெண் ஒருவர் திடீரென தண்டவாளத்தில் குதித்தார். இதனால் அங்கிருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
ரயில் முன் பாய்ந்து...
அச்சமயம் வேகமாக வந்த ரயிலின் 4 பெட்டிகள் அந்த பெண் மீது மோதியது. இதை நேரில் கண்ட ரயில் பயணிகள் பதறினர். ரயில் சென்ற பிறகு அந்த பெண் இறந்திருப்பார் என்றும் கருதினர். தகவலறிந்து அங்கு பணியில் இருந்த ரயில்வே போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
உடலை மீட்க ஸ்டெரெச்சர்
அந்த பெண்ணின் உடலை மீட்பதற்காக ஸ்ட்ரெச்சருடன் தயார் நிலையில் வந்த போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ரயில் சென்ற பிறகு அந்த பெண்ணையும் காணவில்லை. ஒரு வேளை ரயில் சக்கரத்தில் சிக்கி அவர் இழுத்து செல்லப்பட்டிருப்பார் என்று கருதினர். எனினும் தண்டவாளத்திலும் ரத்தக் கறை ஏதும் இல்லை.
போலீஸார் குழப்பம்
இதனால் போலீஸார் குழப்பம் அடைந்து ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்வையிட்டனர். அப்போது மின்சார ரயில் முன் பாய்ந்த அந்த பெண் ரயிலில் அடிப்படாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது தெரியவந்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில்...
ரயில் முன் பாய்ந்த போது தண்டவாளத்தின் மத்தியில் படுத்தபடி கிடந்த அந்த பெண் கண்ணிமைக்கும் நேரத்தில் தண்டவாளத்தில் இருந்து வெளியே வந்து 2-ஆவது பிளாட்பாரத்தில் ஏறி அங்குள்ள நடைமேம்பாலம் வழியாக வெளியே செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன.
மெய்சிலிர்த்த போலீஸ்
இந்த காட்சிகளை பார்த்து ரயில்வே போலீஸார் மெய்சிலிர்த்து போனர். எனினும் தற்கொலை முயற்சியில் மின்சார ரயில் முன் பாய்ந்த அந்த பெண் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை.