"மகளிர் உதவி தொகை உயர்கிறது.." முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு.. பெண்கள் செம ஹேப்பி
பாட்னா: நமது நாட்டில் பல்வேறு மாநில அரசுகளும் பெண்கள் முன்னேற்றத்தை உறுதி செய்யப் பல்வேறு உதவித் திட்டங்களை வழங்கி வருகிறது. அதன்படி பீகாரில் பெண்களுக்கு ரூ.10,000 உதவித்தொகை அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அந்தத் தொகையை அதிகபட்சமாக ₹2 லட்சம் வரை உயர்த்த பீகார் அரசு உத்தரவிட்டுள்ளது. இது அங்குள்ள பெண் வாக்காளர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் பெண்களின் முன்னேற்றத்தை உறுதி செய்ய மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதேபோல பல மாநிலங்களிலும் மகளிர் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

உயர்வு
அதன்படி பீகார் அரசும் அம்மாநில மகளிருக்கு உதவித் தொகைகளை வழங்கி வருகிறது. இதற்கிடையே முதலமைச்சரின் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியுதவியை ₹10,000இலிருந்து அதிகபட்சமாக ₹2 லட்சம் வரை உயர்த்த பீகார் அரசு உத்தரவிட்டுள்ளது. செயல்திறனை அடிப்படையாகக் கொண்ட இந்த புதிய உதவித் திட்டம் குறித்த அறிவிப்பை அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்தார். உதவித் தொகை பெறும் மகளிர் அதை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்து இந்த உதவித்தொகை படிப்படியாக வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
அதிரடி உத்தரவு
ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒரு பெண் தொழில்முனைவோராக உருவாவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். இது தொடர்பாக பீகார் முதல்வர் தனது ட்விட்டரில், "முதல் கட்டமாக, ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒரு பெண்ணுக்கு ₹10,000 வழங்கப்பட்டது. இதுவரை 1 கோடியே 56 லட்சம் பயனாளிகளுக்கு நேரடிப் பணப் பரிமாற்றம் மூலம் இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தகுதியான விண்ணப்பதாரர்களுக்கும் விரைவில் பணப்பட்டுவாடா செய்யப்படும்.
₹10,000 முதல் தவணையாகப் பெற்றவர்கள், நிதியை வேலைவாய்ப்புக்குத் திறம்படப் பயன்படுத்தியிருந்தால், ஆறு மாதங்களுக்குப் பிறகு கூடுதல் உதவிக்குத் தகுதியுடையவர்கள் ஆவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு ₹2 லட்சம் வரை கூடுதல் நிதி உதவி வழங்க செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது. முந்தைய தொகை சரியாகப் பயன்படுத்தப்பட்டால், இத்தொகை கட்டம் கட்டமாக வழங்கப்படும்.
மதிப்பீடு செய்த பிறகே நிதியுதவி
பயனாளிகளின் பணி ஆறு மாதங்களுக்குப் பிறகு மதிப்பாய்வு செய்யப்படும். வேலையை மதிப்பிட்டு, அதற்கேற்பக் கூடுதல் நிதியை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம்" என்று தெரிவித்தார். சிறப்பாகப் பணியாற்றும் பெண்களுக்கு மொத்தத் தொகையும் தேவைக்கேற்ப வழங்கப்படும். மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் உதவி பெற்று பெண்கள் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்குச் சந்தைப்படுத்தல் ஏற்பாடுகளை உறுதி செய்யவும் அரசுத் துறைகளுக்கு நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும், இதர அரசுத் திட்டங்களுடன் பயனாளிகளை இணைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திட்டம் என்ன
இந்த திட்டம் பெண்களின் பொருளாதார நிலையை வலுப்படுத்தி, மாநிலத்திற்குள் சிறந்த வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என்று முதல்வர் நிதிஷ்குமார் கூறினார். அவர் மேலும், "உள்ளூர் வேலைவாய்ப்பு மேம்படுவதால், மக்கள் பீகாருக்கு வெளியே வேலை தேடி அலைய வேண்டிய கட்டாயம் இருக்காது" என்றும் அவர் உறுதியளித்தார்.
பீகார் மக்கள் வேலைவாய்ப்பிற்காகத் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களுக்கும் வருகிறார்கள். பீகார் அரசின் இந்தத் திட்டம் மூலம் மகளிர் முன்னேற்றம் மட்டுமின்றி உள்ளூரிலும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க முடியும் என பீகார் அரசு நம்புகிறது. இதன் மூலம் வெளிமாநிலங்களுக்குச் செல்லும் பீகாரிகள் எண்ணிக்கையைக் குறைக்க முடியும் என்றும் நிதிஷ் அரசு நம்புகிறது!












Click it and Unblock the Notifications