பயங்கரம்... சுற்றுலா விசா மூலம் வளைகுடாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விற்பனையாகும் நேபாளப் பெண்கள்!
சுற்றுலா விசாவில் அழைத்ததில் சென்று வளைகுடா நாடுகளில் பெண்கள் விற்கப்பட்டுள்ளனர். நேபாள நாட்டு அதிகாரிகளின் துணையோடு இந்தக் கொடுமை நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது.
டெல்லி; வளைகுடா நாடுகளுக்கு சட்டவிரோதமாக நேபாளிலிருந்து ஏழைப் பெண்கள் கடத்தப்படுவது அம்பலமாகியுள்ளது.
அதில் நேபாள சர்வதேச விமான நிலையத்தில் உள்ள குடிவரவுத்துறை அதிகாரிகளுக்கு தொடர்பில்லாமல் இவை நடப்பதற்கு வாய்ப்பில்லை என புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட நேபாள பாராளுமன்றக் குழுவுக்கு தலைமை வகிக்கும் பிரபு ஷா தெரிவித்துள்ளார்.
நேபாளைச் சேர்ந்த சுமார் 29 மில்லியன் பேர் வளைகுடா நாடுகள், மலேசியா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.
வருமானம்
இவர்களின் மூலம் நேபாளத்திற்கு வரும் பணம் வழியே அந்நாட்டு அரசுக்கு பெரும் வருவாய் கிடைக்கிறது. நேபாளத்தின் மொத்த உள்நாட்டு வருவாயில் 25 சதவீத இதன் வழியாக கிடைக்கிறது. இதனால் அந்நாட்டுப் பொருளாதாரம் சரிசெய்யப்பட்டு வந்தது.
குற்றச்சாட்டு
நேபாளம் மட்டுமின்றி இந்தியா, இலங்கை, பங்களாதேஷிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு பணிப்பெண்களாக அழைத்துச் செல்லப்படுபவர்கள் சம்பள பிரச்னை, உடல் ரீதியான சித்ரவதைகளை எதிர்கொள்வதாக குற்றச்சாட்டுகள் ஏற்கனவே உள்ள நிலையில் நேபாள பாராளுமன்றக் குழுவும் இவ்வாறான குற்றச்சாட்டினை வைத்துள்ளது.
இந்தியா வழியாக கடத்தல்
சட்ட வல்லுநர் பிரபு ஷா தலைமையில் அமைக்கப்பட்ட இக்குழு சவுதி அரபியா, குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் உள்ள ஐநூறுக்கும் மேற்பட்ட நேபாள தொழிலாளர்களை சந்தித்துள்ளது. அத்துடன் இதில் பெரும்பாலானோர் இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் நாடுகளின் சர்வதேச விமான நிலையங்கள் வழியாகவும் அழைத்து செல்லப்பட்டுள்ளதாக கூறியுள்ளார் பிரபு ஷா.
சுற்றுலா விசா
சுற்றுலா விசா மூலம் சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்படும் இப்பெண்கள் மூன்று லட்சம் ரூபாய்க்கு பணிப்பெண்களாக விற்கப்படுவது இதன் வழியே அம்பலமாகியுள்ளது. இதே போன்று பல நாடுகளுக்கும் பெண்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.