பீகாரில் பரபரப்பு... சட்டசபை தேர்தலில் போட்டியில்லை- 'முதல்வர் வேட்பாளர்' நிதிஷ் திடீர் அறிவிப்பு
பாட்னா: பீகாரில் புதிய திருப்பமாக ஆளும் கட்சியின் முதல்வர் வேட்பாளரான நிதிஷ்குமார் தாம் சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று திடீரென அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் தற்போதைய முதல்வர் நிதிஷ்குமார்.

பீகார் மாநிலத்தில் பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு களத்தில் குதித்துள்ளன. பாரதிய ஜனதாவும் எப்படியும் பீகாரில் ஆட்சியைக் கைப்பற்றிவிடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு தேர்தல் பணி ஆற்றி வருகிறது.
இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் புதிய திருப்பமாக, சட்டசபை தேர்தலில் தாம் போட்டியிடவில்லை; என்னுடைய நேரம் முழுவதையும் பிரசாரத்துக்கே பயன்படுத்த இருக்கிறேன்.. தேர்தல் பிரசாரத்துக்கு தலைமை தாங்குகிறேன் என முதல்வர் வேட்பாளர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
பீகார் தேர்தலில் தாம் போட்டியிடவில்லை என்று ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலுவின் மனைவியும் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி அறிவித்த சிறிது நேரத்திலேயே நிதிஷ்குமாரும் இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது பீகார் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications