பதவி ஆசையில்லை... இனி, தேர்தலில் போட்டியிட மாட்டேன்: தேவகவுடா அறிவிப்பு
சிக்மகளூர்: பதவி ஆசை குறைந்து விட்டதால், இனி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், கட்சியை வளர்க்கும் பணிகளில் மட்டுமே ஈடுபடப் போவதாகவும் அறிவித்துள்ளார் மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவே கவுடா.
கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டம் நிரூகட்டா கிராமத்தில் நடந்த ஜனதா தரிசனம் நிகழ்ச்சியில், முன்னாள் பிரதமர் தேவேகவுடா கலந்து கொண்டு மக்களிடம் குறை கேட்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது :-
வளர்ச்சிப் பணிகள் பாதிப்பு...
இந்த பகுதியில் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள பிரதான சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதை மாநில அரசு விரைவில் சீரமைக்க வேண்டும்.
ஆர்ப்பாட்டம்...
இல்லையென்றால் நான் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவேன்.
வயதாகி விட்டது...
மக்கள் நலன் கருதி சேவை செய்யும் ஆசையில் செயல்பட்டு வருகிறேன். எனக்கு வயதாகி வருகிறது. பதவி ஆசையும் குறைந்து விட்டது.
ஒரே குறிக்கோள்...
இனி வரும் காலங்களில் தேர்தலில் போட்டியிடமாட்டேன். கட்சியை வளர்ப்பது மட்டுமே எனது குறிக்கோளாக இருக்கும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.