5 வீடுகளில் வேலை பார்த்து +2 தேர்வில் 85 சதவீத மார்க் எடுத்த பெங்களூர் ஷாலினி
பெங்களூர்: 5 வீடுகளில் பணிப்பெண்ணாக வேலை செய்யும் ஷாலினி பிளஸ் டூ பொதுத் தேர்வில் 84.8 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
பெங்களூரைச் சேர்ந்த ஷாலினி என்ற 17 வயது மாணவி பிளஸ் டூ பொதுத் தேர்வில் 84.8 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஏழைக் குடும்பத்தில் பிறந்த அவர் 5 வீடுகளில் பணிப்பெண்ணாக உள்ளார். வீட்டு வேலைகளை செய்து கொண்டே படித்து இவ்வளவு மதிப்பெண்கள் எடுத்துள்ளார். கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்த அவரது தந்தை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடக்க முடியாமல் உள்ளார்.

ஷாலினியின் தாய் பல வீடுகளில் வீட்டு வேலை செய்து குடும்பத்தை நடத்துகிறார். ஷாலினி தேர்வு எழுதுவதற்கு முன்பு அவருடைய சகோதரருக்கு ரத்த புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து ஷாலினி கூறுகையில்,
கடந்த 7 ஆண்டுகளாக நான் என் தாய்க்கு உதவியாக வீடுகளில் வீட்டு வேலை செய்து வருகிறேன். நான் தேர்வில் 90 முதல் 95 சதவீத மதிப்பெண்கள் பெற நினைத்தேன். ஆனால் என் சகோதரருக்கு உதவியாக மருத்துவமனையில் இருக்க வேண்டியதாகிவிட்டது. எனக்கு மதிப்பெண்களை விட என் சகோதரர் தான் முக்கியம். எலக்ட்ரானிக்ஸ் படித்து என் பெற்றோருக்கு பெருமை தேடிக் கொடுக்க விரும்புகிறேன் என்றார்.
ஷாலினி பற்றி அவர் படித்த எஸ்ஜிபிடிஏ பியூசி கல்லூரி முதல்வர் பிரதாப் நாயுடு கூறுகையில்,
ஷாலினி இத்தனை கஷ்டங்களுக்கு இடையே படித்தாலும் எப்பொழுதும் சிரித்த முகத்துடனேயே இருப்பார். அவரது தந்தை மற்றும் சகோதரர் பற்றி எனக்கு செய்தித்தாள்கள் மூலம் தான் தெரிய வந்தது என்றார்.












Click it and Unblock the Notifications