யஷ்வந்த் சின்ஹாவின் "ஜெயில்" டிராமாவின் பின்னணியில் ஜார்க்கண்ட் "சி.எம்.' கனவு!
ராஞ்சி: பாரதிய ஜனதா மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா அரசியிலில் அடுத்த இன்னிங்ஸை அற்புதமாக தொடங்கியுள்ளார்.
வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அத்வானி, ஜஸ்வந்த்சிங் வரிசையில் மூத்த அமைச்சராக வலம் வந்தவர் யஷ்வந்த் சின்ஹா. நிதி அமைச்சராக, வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர்.
பாரதிய ஜனதாவில் மோடி விஸ்வரூபமெடுத்த காலத்தில் லேசான சலசலப்பு காட்டிப் பார்த்தார் யஷ்வந்த் சின்ஹா. ஆனால் மோடியின் விஸ்வரூபம் தடுக்க முடியாதது என்று உணர்ந்த நிலையில் அமைதியாகிவிட்டார்.

மகனுக்கு சீட்
அத்துடன் ஜஸ்வந்த்சிங் போல சீட்டு கேட்டு அடம்பிடிக்காமல் ரொம்ப சாதுரியமாக தமது ஹாஜரிபாக் தொகுதியை மகனுக்கு வாங்கிக் கொடுத்துவிட்டார் சின்ஹா. அதன்பின்னர் மத்தியில் அமைச்சரவை அமைக்கப்பட்ட போதும் அலட்டிக் கொள்ளாமல் இருந்தார் சின்ஹா.

மின்சார போராட்டம்
டெல்லியில் மோடி அரசு அமைந்த கையோடு ஜார்க்கண்ட்டில் தமது அரசியல் வேலையை தொடங்கிவிட்டார். தமது ஹாஜரிபாக் தொகுதியில் டேரா போட்டு மின்சாரத்துக்கான போராட்டத்தை முன்னெடுத்தார்.

ஜெயில் டிராமா
மின்வாரிய அதிகாரியை கட்டிப்போட சொல்லி களேபரமாக்கினார் யஷ்வந்த் சின்ஹா. அத்துடன் ஜாமீன் கேட்காமல் ஜெயிலில் போய் ஹாயாக அமர்ந்து கொண்டார். ஆனால் பாஜக தலைவர்கள் யாரும் அவரை கண்டுகொள்ளாமல் இருந்தனர்.

ஏன் இப்படி?
இப்படி பாஜகவின் தேசிய அரசியலில் இருந்து மெல்ல மெல்ல யஷ்வந்ஹ் சின்ஹா ஒதுங்கிப் போய் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஏன் உட்கார்ந்தார் என்பதற்கான விடையை போட்டு உடைத்தார் நேற்று அவரை சந்தித்த மற்றொரு பாஜக மூத்த தலைவர் அத்வானி.

ஜார்க்கண்ட் முதல்வர் வேட்பாளர்
அதாவது ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அத்தேர்தலில் ஜார்க்கண்ட் மாநில பாஜகவின் முதல்வர் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா முன்னிறுத்தப்பட இருக்கிறார். இதற்கு அத்வானியும் ஆதரவு தெரிவித்து பேட்டியும் கொடுத்திருக்கிறார்.

முதல்வர் கனவு
ஜார்க்கண்ட் மாநில முதல்வர் பதவியை கனவாகக் கொண்டுதான் யஷ்வந்த்சின்ஹா தமது தேசிய அளவிலான அரசியல் நடவடிக்கைகளை கைவிட்டுவிட்டு மாநிலத்து பக்கம் திரும்பி ஜெயில் டிராமா போன்றவற்றை அரங்கேற்றியிருக்கிறார் என்கின்றனர் பாஜக தொண்டர்கள்.












Click it and Unblock the Notifications