ரூ.8.75 லட்சம் கோடி வங்கிக் கடன்களை மீட்க வலியுறுத்தி மோடிக்கு யெச்சூரி கடிதம்
டெல்லி: பொதுத் துறை வங்கிகளில் இருந்து சில பெருநிறுவனங்கள் வாங்கியுள்ள ரூ.8.75 லட்சம் கோடி மதிப்பிலான வங்கிக் கடன்களை மீட்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி கடிதம் மூலமாக வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளதாவது:

ரிசர்வ் வங்கி அண்மையில் தாக்கல் செய்துள்ள நிதி நிலை அறிக்கையில் பொதுத் துறை வங்கிகள் மூலம் அளிக்கப்பட்ட ரூ.8.75 லட்சம் கோடி மதிப்பிலான கடன்கள் இன்னும் திரும்பி செலுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்தாததால் அனைத்து இந்தியர்களின் பணத்தையும் பெருநிறுவனங்கள் அபகரித்துக் கொண்டுள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட அனைத்து கடனாளிகளிடம் இருந்து மொத்த கடன்களையும் மீட்கும் வரை பொதுத் துறை வங்கிகளுக்கு மேலும் பணம் அளிக்கக் கூடாது.
அப்படி செய்யவில்லை எனில் பெரு முதலாளிகளின் ஊதாரித்தனத்துக்காக ஏழை இந்தியர்களின் பணத்தை மத்திய அரசு செலுத்தியது போலவும் தவறான வகையில் பெற்ற பணத்தைப் பாதுகாப்பது போலவும் ஆகிவிடும்.
இந்த வங்கிக் கடன்களை மீட்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை. இந்தத் தொகையில் பெருமளவிலான பங்கு வெளிநாடுகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றை மீட்க முடியாமல் போகலாம் என்றும் மத்திய அரசின் தலைமை கணக்காளர் சசி காந்த் சர்மா அண்மையில் கூறியுள்ளார்.
ஆகையால் முதல் 100 கடனாளிகளிடம் இருந்து நிலுவையில் உள்ள வங்கிக் கடன்களை மீட்க உடனடி செயல்திட்டம் வகுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அக்கடிதத்தில் சீதாராம் யெச்சூரி வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications