'படையப்பாவை' இழுக்க களத்தில் குதித்தார் எதியூரப்பா... கூடவே ஈஸ்வரப்பாவும்!
பெங்களூர்: ரஜினியை பாஜகவுக்கு இழுக்க நடந்து வரும் முயற்சிகள் குறித்து ரஜினி தரப்பு தொடர்ந்து மெளனம் சாதித்து வரும் நிலையில் ரஜினி, பாஜக குறித்து தினசரி ஏதாவது ஒரு நியூஸ் வெளியானபடிதான் உள்ளது. லேட்டஸ்ட் நியூஸாக கருதப்படுவது, முன்னாள் கர்நாடக முதல்வர் எதியூரப்பாவும், மாநில பாஜக தலைவர் ஈஸ்வரப்பாவும் அந்த முயற்சியில் இறங்கியுள்ளனராம்.
ரஜினியை பலாப்பழம் போல மொய்த்து வருகிறது பாஜக. தனது நிலை தமிழகத்தில் ரொம்பக் கேவலமாக உள்ளதை நன்றாக உணர்ந்துள்ள பாஜகவுக்கு, ஜெயலலிதா சிறைக்குப் போனது, பழம் நழுவி பாதாம்பாலில் விழுந்தது போலாகி விட்டது.
உடனே படையப்பாவை நோக்கி படையெடுக்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் ரஜினிதான் பிடி கொடுப்பது போலத் தெரியவில்லை.

அரசியல் தடுமாற்றத்தில் தமிழகம்
ஜெயலலிதா இல்லாமல் தமிழகத்தில் அரசியல் தடுமாற்றம் நிலவி வருவது உண்மை. கிட்டத்தட்ட தமிழகம் ஸ்தம்பித்துள்ளது. ஆட்சி நடக்கிறதா என்றும் தெரியவில்லை. திமுக அமைதி காக்கிறது. ரகசியத் திட்டங்களில் மும்முரமாகியுள்ளது.

வாய்ச் சொல் வீரர்கள்
மறுபக்கம் வாய்ச் சொல் வீரர்களும், அறிக்கை அரசியல்வாதிகளும் தினசரி ஏதாவது ஒரு அறிக்கை விட்டு நாங்களும் சீனில் இருக்கோம்ல என்று காட்டிக் கொண்டுள்ளனர். அதைத் தாண்டி அவர்களால் எதுவும் செய்ய முடியாத நிலை, எதுவும் செய்யவும் தெரியவில்லை அவர்களுக்கு.

சந்தில் சிந்து பாடத் துடிக்கும் பாஜக
இந்த சைக்கிள் கேப்பில் புகுந்து சந்தில் சிந்து பாடத் துடிக்கிறது பாஜக. அதற்கு அது ரஜினியை மலை போல நம்பியுள்ளது.

ரஜினி கிடைச்சா போதும்
எப்படியாவது ரஜினியை நம் பக்கம் இழுத்து விட்டால் போதும், அடுத்த தேர்தலில் செயின்ட் ஜார்ஜ் கோட்டை நம்முடைய பாக்கெட்டில் என்ற முடிவுக்கே வந்து விட்டார்கள் அவர்கள்.

ஷா முதல் இசை வரை
இதற்காக பாஜக தலைவர் அமீத் ஷா முதல் தமிழக தலைவர் தமிழிசை வரை பலரும் பலமாக முயன்று வருகின்றனர்.

3 முறை பேசிய ஷா
ரஜினியுடன், அமீத் ஷா 3 முறை போனில் பேசியுள்ளதாக கூறுகிறார்கள். அதற்கு ரஜினி என்ன பதில் சொன்னார் என்பது தெரியவில்லை.

எதியூரப்பாவும் களத்தில் குதித்தார்
இந்த நிலையில், முன்னாள் கர்நாடக முதல்வர் எதியூரப்பாவும், கர்நாடக மாநில பாஜக தலைவர் ஈஸ்வரப்பாவும் கூட தற்போது ரஜினியை இழுக்கும் முயற்சியில் குதித்துள்ளனராம்.

லிங்கா ஷூட்டிங்கில் எதியூரப்பா
லிங்கா படப்பிடிப்புக்கே போய் ரஜினியை இருவரும் நேரி்ல் பார்த்து நம்ம கட்சிக்கு வந்துருங்க என்று கேட்டுக் கொண்டனராம். அவர்களுக்கு ரஜினி என்ன பதில் சொன்னார் என்பதும் தெரியவில்லை.

இளவரசனும் கோரிக்கை
இதேபோல பெங்களூர் ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் இளவரசனும் ரஜினியை அரசியலுக்கு வருமாறு கேட்டுக் கொண்டாராம். அதற்கு ரஜினி, வெயிட் பண்ணுங்க என்று கூறினாராம்.

லிங்கா முடியும் வரை நோ பதில்
இப்படி பலரும் பல முனைகளில் வந்து முட்டி மோதியபடி இருந்தாலும் யாருக்கும் ரஜினி உறுதியான பதிலை இதுவரை தரவில்லை என்கிறார்கள். லிங்கா முடிந்த பிறகே அவர் பேசுவார் என்றும் சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications