எடியூரப்பாவுக்கு இது புதிதல்ல.... ஆறாவது முறையாக நம்பிக்கை கோருகிறார்!
கர்நாடகா முதல்வரான பாஜகவின் எடியூரப்பா இதுவரை ஐந்து முறை நம்பிக்கை ஓட்டெடுப்பு கோரியுள்ளார். இன்று ஆறாவது முறை.
Recommended Video
பெங்களூரு: மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்றுள்ள பாஜகவின் பி.எஸ். எடியூரப்பா, ஆறாவது முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பை இன்று கோர உள்ளார்.
கர்நாடகா முதல்வராக நேற்று முன்தினம் பதவியேற்ற பாஜகவின் எடியூரப்பா, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, இன்று மாலை 4 மணிக்கு பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பை கோர உள்ளார்.
எடியூரப்பா 2007ல் ஏழு நாட்கள் முதல்வராக இருந்தார். பின்னர் 2008ல் 3 ஆண்டுகள், 62 நாட்கள் முதல்வராக இருந்தார். இந்த காலகட்டத்தில் மட்டும் 5 முறை நம்பிக்கை வாக்கெடுப்பை அவர் கோரினார்.
2007 நவம்பரில் நடந்த வாக்கெடுப்பின்போது, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவை திரும்பப் பெற்றதால் எடியூரப்பா தோல்வியடைந்தார்.
2008 மே மாதம் நடந்த தேர்தலில் பாஜக வென்று, எடியூரப்பா முதல்வரானார். 2008 ஜூன் மாதத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநர் உத்தரவிட்டார். அப்போது காங்கிரஸ் வெளிநடப்பு செய்ய, எடியூரப்பா வென்றார்.
2010ல் பாஜகவைச் சேர்ந்தவர்கள் அதிருப்தி தெரிவிக்க, 2010 அக்டோபரில் மூன்றாவது முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பை கோரினார் எடியூரப்பா. பாஜகவைச் சேர்ந்த 11 எம்எல்ஏக்கள் மற்றும் 5 சுயேச்சைகளை தகுதி நீக்கம் செய்தார் அப்போது சபாநாயகராக இருந்து போப்பையா. அதையடுத்து எடியூரப்பா வென்றார்.
இது மோசடி என்று அறிவித்த அப்போதைய ஆளுநர் பரத்வாத், குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைத்தார். அப்போது எடியூரப்பாவுக்கு மற்றொரு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
கடைசியாக 2011 ஜூன் மாதம் ஐந்தாவது முறையாக நம்பிக்கை ஓட்டெடுப்பை சந்தித்தார் எடியூரப்பா, மஜத புறக்கணிக்க, காங்கிரஸ் வெளிநடப்பு செய்ய, அப்போது எடியூரப்பா வென்றார்.
இன்று மாலை, ஆறாவது முறையாக மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பை எடியூரப்பா கோர உள்ளார்.